தினகரன் இல்லத்தில் அவசர ஆலோசனை!..

dinak
குடியரசுத் தலைவர் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து முடிவு செய்ய அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் தற்போது அடையாறு இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை, கடந்த 10 நாட்களுக்கு முன்பு சந்தித்த டி.டி.வி.தினகரன், குடியரசுத் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து பொதுச் செயலாளர் சசிகலா முடிவு செய்வார் என தெரிவித்திருந்தார்.

ஆனால் நேற்று அதிமுக அம்மா அணி சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்தை ஆதரிக்க ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது குறித்து சசிகலாதான் முடிவு செய்வார் என டி.டி.வி.தினகரன் கூறியிருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்களும் தன்னிசைசையாக முடிவு செய்துள்ளதாக தினகரன் தரப்பு அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து இன்று டி.டி.வி.தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் தோப்பு வேங்கடாசலம், கருணாஸ்,மாரியப்பன் கென்னடி,செந்தில் பாலாஜி,பழனியப்பன் மற்றும் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Leave a Response