கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் மகனுமாகிய குமாரசாமி, ஏற்கனவே திரைப்பட தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் திரையுலகில் பங்கு பெற்றவர். தற்போது முழு நேர அரசியலில் ஈடுபட்டு வரும் அவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளது.
இந்த திரைப்படத்திற்கு ’பூமி புத்ரா’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் குமாரசாமி கதாபாத்திரத்தில் நடிக்க ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். எஸ்.நாராயணன் என்பவர் படத்தை இயக்க உள்ளார்.
பூமி புத்ரா என்ற பெயரை வேறு ஒரு தயாரிப்பு நிறுவனம் பதிவு செய்து வைத்திருந்தது. ஆனால் அந்த பெயரை சென்னாம்பிகா தயாரிப்பு நிறுவனம் தற்போது வாங்கியுள்ளது. இந்த சென்னாம்பிகா தயாரிப்பு நிறுவனம், முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது தனது வாழ்க்கை வரலாற்றை தானே தயாரிக்க உள்ளார் குமாரசாமி.
தன்னுடைய அரசியல் வாழ்க்கைக்கும்,கர்நாடக மக்களிடையே செல்வாக்கை அதிகரிக்கவும் தனது வாழ்க்கை வரலாற்று திரைப்படம் உதவியாக இருக்கும் என குமாரசாமி முடிவு செய்துள்ளதார்.