சில நாட்களுக்கு முன்பு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தொடர் அறவழி ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அந்த ஆர்பாட்டம் முடிவடையும் நேரத்தில் காவல்துறையினரால் ஆங்காங்கே தடி அடி நடத்தப்பட்டது. அந்த தடி அடியில் சென்னை மெரீனா கடற்கரையில் இறுதிக்கட்ட போராட்ட நேரத்தில் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் அடைக்கலம் கொடுத்த நடுக்குப்பம் மீனவ மக்கள் காவல்துறையின் தடி அடிக்கும், காவல்துறையின் அராஜக செயலுக்கும் சற்று அதிகமாகவே பாதிக்கப்பட்டனர்.
காவல்துறையின் தடி அடி, காவல்துறையின் அராஜகமாகவே நிறைவேறியது என்பது தொலைக்காட்சிகளிலும், சமுக வலைதளங்களிலும் நன்றாகவே காண்பிக்கப்பட்டது. காவல்துறையினரை ஆளும் கட்சிகளை தவிர்த்து மற்ற எதிர் கட்சிகள் அனைத்தும் கடுமையாக விமர்சித்து, அராஜகத்தில் ஈடுப்பட்ட காவல்துறையினர் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என கோரிக்கை வைத்துவருகின்றனர்.
இந்நிலையில் இன்று மாலை தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் நடுக்குப்பம் பகுதிக்குள் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர்களுக்கு நிவாரண உதவியாக உணவு பொருட்கள் வழங்கினார்.