விதிகளை மீறியுள்ள ரத யாத்திரை வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்: கனிமொழி..

 

மோட்டார் வாகனச் சட்ட விதிமுறைகளை மீறியுள்ள ராம ராஜ்ஜிய ரத வாகனத்தை காவல் துறை உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும் என, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ரத யாத்திரை இன்று (வெள்ளிக்கிழமை) கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம், குழித்துறை, களியக்காவிளை வழியாக கேரள மாநிலம் திருவனந்தபுரம் செல்கிறது.

இந்நிலையில், ராம ராஜ்ஜிய ரத வாகனம் மோட்டார் வாகனச் சட்ட விதிமுறைகளை மீறியுள்ளதாகவும், அதனால், அந்த வாகனத்தை உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,

“ரத யாத்திரை என்ற பெயரில் தமிழகத்துக்குள் நுழைந்துள்ள வாகனம் கோயில் போன்ற வடிவமைப்புடன் யாத்திரையாக வந்து கொண்டிருக்கிறது. இந்த வாகனம், மோட்டார் வாகனச் சட்டத்தை மீறியுள்ளதாக இன்று செய்தி வெளியாகியுள்ளது.

மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, வாகனத்தின் பதிவு எண்கள் முன்னும் பின்னும் பிரதானமாக தென்பட வேண்டும். தயாரிக்கப்பட்ட வாகனத்தில் மாறுதலை செய்ய, தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு மட்டுமே சட்டப்படி அனுமதி உண்டு. கோவில் போல மாறுதல் செய்ய விதிகளில் இடமில்லை.

மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 207-ன் படி, காவல்துறையினர் இந்த வாகனத்தை உடனடியாக பறிமுதல் செய்திருக்க வேண்டும். பதிவு எண் இல்லாத வாகனம், சட்டத்தின்படி, பதிவு செய்யப்படாத வாகனமாகவே கருதப்பட வேண்டும்.

இந்த வாகனம் தமிழக எல்லைக்குள் நுழைந்தவுடன் பறிமுதல் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பறிமுதல் செய்ய வேண்டிய காவல்துறையினர், இந்த வாகனத்துக்கு பலத்த பாதுகாப்பை வழங்கி, சமூக அமைதியை சீர்குலைக்க துணை போய்க்கொண்டுள்ளனர்.

திருச்சியில் ஹெல்மெட் அணியாமல் வந்த குற்றத்துக்காக இரு சக்கர வாகனத்தை விரட்டிச் சென்று, ஒரு பெண்ணின் மரணத்துக்குக் காரணமான காவல்துறையினர், சட்டத்தைத் துச்சமாக மதித்து விதிகளை காற்றில் பறக்கவிடும் ஒரு வாகனத்துக்கு பாதுகாப்பு அளிப்பது, தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

காவல்துறை உடனடியாக தலையிட்டு, விதிகளை மீறியுள்ள ரத வாகனத்தை உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும்” என

கனிமொழி பதிவிட்டுள்ளார்…

Leave a Response