அ.தி.மு.க.வில் உள்ள இரு அணிகளில் இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது தொடர்பான விசாரணை இன்று முடிந்துள்ளதாகவும், தீர்ப்பு விபரங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அ.தி.மு.க.வில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் ஒரு அணியினரும், டி.டி.வி தினகரன் தலைமையில் ஒரு அணியினரும் செயல்பட்டு வருகின்றனர். இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே வழங்க வேண்டும் என இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்தை நாடினர்.
இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஆவணங்கள், பிரமான பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஏற்கனவே, ஆறு கட்டமாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று ஏழாவது கட்டமாக விசாரணை நடைபெற்றது. இதில், இரு தரப்பினரும் தங்களது வாதங்களை முன்வைத்தனர்.
குறிப்பாக ஜெயலலிதா மறைந்த பின்னர் டி.டி.வி தினகரனுக்கு ஆதரவாக 128 உறுப்பினர்கள் இருந்ததாகவும் அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளதாகவும் அந்த அணியின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தரப்பிலும் சில முக்கிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு இறுதி வாதங்கள் வைக்கப்பட்டன. இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்டறிந்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் இறுதி விசாரணை நிறைவடைந்ததாக தெரிவித்துள்ளனர்.
தீர்ப்பு விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக நடைபெற்ற இந்த விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் சின்னம் யாருக்கு? என்பது விரைவில் தெரியவரும்,