உலகத்திலேயே முதல் முறையாக ‘ரெட் டிராகன்’ என்னும் காமிராவை பயன்படுத்தி படமாக்குகிறார்கள் சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கம் படத்தை. ஒளிப்பதிவு செய்பவர் ஒளிவழி மன்னன் சந்தோஷ் சிவன். இன்னும் ஹாலிவுட்டில் கூட பயன்படுத்த ஆரம்பிக்காத இந்த காமிராவை தமிழ் சினிமாவில், இந்திய சினிமாவில் முதன் முறையாக பயன்படுத்துகிறார்கள். இந்த காமிராவை வைத்து டெஸ்ட் ஷுட் செய்தனர் குழுவினர்.
இதுபற்றி ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் கூறுகையில், “தொழில்நுட்பத்தில் சென்னைதான் முன்னோடியாக விளங்க வேண்டும் என்பது எனது ஆசை. அது இப்போது ஆரம்பமாகியுள்ளது. ஒரு திரைப்படத்தின் ஒளிப்பதிவு அப்படியே இருந்தாலும் காமிராவின் நுணுக்கங்கள் நிறையவே மாற்றங்களைக் கண்டு வருகிறது,” என்றார்.
இயக்குனர் லிங்குசாமி கூறுகையில், “இன்றைய இளம் திறமைசாலிகளுடன் போட்டி போட வேண்டிய சூழலில், என்னை நான் வளர்த்துக் கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்த காமிராவில், திறமை வாய்ந்த சந்தோஷ் சிவனுடன் பணி புரிவது மகிழ்ச்சியை அளிக்கிறது,” என்றார்.
சூர்யா கூறுகையில், “இந்த திரைப்படத்தில் பணிபுரிவது சிறப்பு வாய்ந்த ஒன்று. சிறு வயது முதலே சந்தோஷ் சிவன் அவர்களின் ஒளிப்பதிவு மேஜிக் என்னைக் கவர்ந்த ஒன்று. உலகத்திலேயே முதன் முதலாக இந்த காமிராவில் எங்கள் படத்தின் ஒளிப்பதிவு நடப்பது பெருமைய வாய்ந்த ஒன்று, ” என்றார்.
சமந்தா நாயகியாக நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ராஜீவன் அரங்க அமைப்பு செய்கிறார். பிருந்தா சாரதி வசனம் எழுத, ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார். நவம்பர் 15 முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. மே 2014-ல் இப்படம் வெளியாகும்.