திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக அம்மாநில முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், “திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய்யானது தமிழ்நாட்டில் உள்ள ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் தயாரிக்கப்படவில்லை” என மத்திய உணவு பாதுகாப்புத் துறையின் சோதனையில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சர்ச்சைக்குரிய நெய் ஏ.ஆர். டெய்ரி நிறுவனமானது தெலுங்கானாவை சேர்ந்த பிரபல நிறுவனத்தில் இருந்து வாங்கி உள்ளது. தெலுங்கானாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வைஷ்ணவி டெய்ரி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது தான் இந்த கலப்பட நெய் என பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருப்பதிக்கு அனுப்ப வைஷ்ணவி டெய்ரி நிறுவனத்திடமிருந்து 4 கன்டெய்னர் நெய்யை ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் வாங்கியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வைஷ்ணவி நிறுவனத்திற்கு மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.



