திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி, கீழ்கொடுங்காலூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர்.
இவரின் மனைவி சரசு.
தம்பதிகள் இருவரும் தங்களது ஊரில் வசித்து வரும் 15 க்கும் மேற்பட்ட பெண்களிடம், தங்களின் பெயரில் லோன் எடுத்து கொடுக்குமாறும், அதற்கான தவணையை மாதம் தவறாமல் செலுத்திவிடுகிறோம் எனவும் பேசி மூளைச்சலவை செய்துள்ளனர்.
ஒரு பெண்ணுக்கு தெரியாமல் மற்றொரு பெண் என, படிக்காத பெண்களை குறிவைத்து நடந்த இந்த நூதன மோசடியில் ஒவ்வொரு பெண்ணின் பெயரிலும் ரூ.4 இலட்சம் முதல் ரூ.5 இலட்சம் வரை மதுரா மைக்ரோ பைனான்ஸ் உட்பட தனியார் நிதி நிறுவனங்களில் லோன் எடுத்துள்ளனர். மொத்தமாக இந்த பணத்தை தற்போது சுருட்டிக்கொண்டு தம்பதி, ஊரை விட்டு ஓட்டம் பிடித்துவிட்டது.
இதனால் மாத தவணையை கேட்டு, தனியார் நிதி நிறுவன அதிகாரிகள் ஒவ்வொரு பெண்களின் வீட்டிற்கு சென்றபின் தான் 15 க்கும் மேற்பட்டவர்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்துள்ளது. தற்போது நிதி நிறுவன அதிகாரிகள், லோன் எடுத்த பெண்களின் வீட்டிற்கு வரத்தொடங்கி தவணையை கேட்டதால், பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கின்றனர்.
இந்த விவகாரத்தில் படிக்காத பெண்களிடம் பேசி, அவர்களின் அடையாள ஆவணங்களைப் பெற்று, வீட்டில் இருந்தபடி நூதனமாக லோனுக்கு விண்ணப்பித்து பணத்தை மோசடி செய்தது அம்பலமாகி இருக்கிறது. பெரும்பாலும் கணவர்களுக்கு தெரியாமல் லோன் எடுத்துக்கொடுத்த பெண்கள், இந்த விவகாரம் அம்பலமானதால் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தவணையை சரியாக செலுத்தினார்கள் என்ற நம்பிக்கையின் பெயரிலும், லோன் எடுத்துக்கொடுக்கமாட்டேன் என சிலர் கூறும் போது அவர்களிடம் பேச்சுக்கொடுத்து சரி செய்து கடன் வாங்கப்பட்டுள்ளது. தற்போது வாங்காத பணத்திற்கு ஆவணத்தை அள்ளிக்கொடுத்து பாதிப்பை எதிர்கொண்டுள்ள பெண்கள், மோசடி செய்த தம்பதியை கைது செய்து பணத்தை மீட்டுத்தர வழிவகை செய்ய வேண்டும் என குமுறி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட கணவரை இழந்த பெண் ஒருவர், உறவினர்களின் பராமரிப்பில் வசித்து வரும் நிலையில், அவர் லோன் எடுத்து கொடுத்து சிக்கலில் சிக்கி தவிப்பதால், தன்னை பராமரிக்கும் உறவினர்கள் கேள்விமேல் கேள்விகளை கேட்டு வருத்தத்தில் ஆழ்த்துவதாகவும், அடிப்பதாகவும் கண்ணீருடன் தனது வேதனையை தெரிவிக்கிறார்.