அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
திமுக அமைச்சரவையில் மீன் வளத்துறை மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் பதவி வகித்து வருகிறார். கடந்த 2002-2006ம் ஆண்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது கடந்த 2006ம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் வழங்கி சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தில் 2009ம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதனடிப்படையில் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. மேலும், அனிதா ராதாகிருஷ்ணன், அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துகளை 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமலாக்கத்துறை முடக்கியது.
சொத்துகளை முடக்கியதற்கு எதிராகவும், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரியும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியம் மற்றும் சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது. அப்போது அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அமலாக்கத்துறை இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. ஆதலால் வழக்கை ரத்து செய்ய கூடாது என்றும் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது. அவர் மீதான வழக்கை அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரிக்கலாம் எனக் கூறி அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து அவருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
ஏற்கனவே சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விடுவித்த உத்தரவை ரத்து செய்து வழக்குகளை மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. அடுத்தடுத்து திமுக அமைச்சர்கள் நெருக்குடி ஏற்படுவது தலைமையை அதிர்ச்சியடைய செய்துள்ளது.




