என்னதான் இருக்கிறது இந்த குதிரைவாலில்? திரையரங்குக்கு சென்று பார்க்கவேண்டிய அவசியம் என்ன!

தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறக்கப்பட்டு 100% பார்வையாளர்களுடன் திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. பெரிய பட்ஜெட் படங்கள், பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், புது முயற்சிகளை கையில் எடுத்து உருவாகி வரும் புதிய படங்களும் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.

அந்த வரிசையில், தமிழ் சினிமா இதுவரை கண்டிராத புதிய முயற்சியை கையில் எடுத்திருக்கிறது ‘குதிரைவால்’ திரைப்படம். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர், ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

இயக்குனர் பா. இரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ், யாழி ஃபிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படம் மார்ச் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லியோனல் ஜாசன், ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இணைந்து இப்பபடத்தை இயக்கியுள்ளனர்.
கலையரசன், அஞ்சலி பாட்டீல், சேத்தன் ஆகியோர் இப்பபடத்தில் நடித்துள்ளனர். சில்லுக்கருப்பட்டி, வாழ் ஆகிய படங்களை அடுத்து பிரபல பாடகர் பிரதீப் குமார் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

படத்தின் ட்ரெய்லரில், “கனவுல தொலைச்சத நனவுல தேடுறன்”, “உளவியல் போர்”, “கனவுக்கு மேக்ஸ்ல விடை இருக்கா?” “மேக்ஸ்ல ஒரு Illusion theory இருக்கு” – இது போன்ற வசனங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

வழக்கமான திரைப்படத்தில் இல்லாத புதிய கதைக்களம் கொண்டதாக இப்படம் இருக்கும் என தெரிகிறது.

என்னதான் இருக்கிறது இந்த ‘குதிரைவால்’ திரைப்படத்தில்? திரையரங்குக்கு சென்று பார்க்கவேண்டிய அவசியம் என்ன!
குதிரைவால் திரைப்படத்தில் என்ன சிறப்பு போன்ற கேள்விகளுக்கு படக்குழு பதிலளித்திருக்கிறது.

“நிறைய புதிய விஷயங்களை படத்தில் முயற்சி செய்திருக்கின்றோம் என்றாலும் இது ஒரு அரசியல் படம்.

குதிரை, இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அயோத்திதாசரின் இந்திர தேச சரித்திரம்தான் குதிரைவால் படத்திற்கு அடித்தளம். ஒரு மரபு வழிப்புனைவை இன்னொரு புனைவால்தான் உடைக்க முடியும் என்ற அயோத்திதாசரின் கருத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் எழுதப்பட்டது.

வரலாற்றில் குதிரை என்பது ஆக்கிரமிப்பின் சின்னமாகவே இருந்து வருகிறது என்பதை குதிரைவால் படம் சுட்டிக்காட்டும்.

புனைவு மூலமாக ஒட்டுமொத்த வரலாற்றையும் குதிரைவால் படம் கேள்விக்கு உட்படுத்தும்.
இப்படத்தில் புதுமைகள் எவ்வளவு இருக்கிறதோ, அதே அளவில் இது ஒரு சீரியஸான படமும் கூட. பெரியாரின் பகுத்தறிவு இப்படத்தில் இருக்கும். ஆனால் புனைவாக இருக்கும்.

இப்படத்தில் தமிழ் சிறு பத்திரிக்கைகளின் தாக்கம் உண்டு. இதில் மேஜிக்கல் ரியலிசம் உண்டு” என படக்குழு தெரிவித்திருக்கிறது.
குதிரைவால் படம் குறித்து பேசி இருக்கும் இயக்குனர் பா. ரஞ்சித்,
“தமிழ் சினிமாவில் இது ஒரு புதிய ஆரம்பமாக இருக்கும். புற உலகில் இருந்து விலகி அக உலகிற்குள் இருக்கும் ஒரு கலையை பற்றி குதிரைவால் படம் பேசி இருக்கிறது. கனவு, கனவு உலகத்தில் இருக்கும் சுதந்திரம் பற்றி குதிரைவால் காட்சிப்படுத்தி உள்ளது.
வழக்கமான ஹீரோ வில்லன் கதையாக இல்லாமல், பார்ப்பவர்கள் பர்சனலாக கனெக்ட் செய்து கொள்ள கூடிய அளவில் படம் இருக்கும்.

திரையரங்குகளில் குதிரைவால் படம் தரும் புதிய அனுபவம் பேசப்படும்.” என படக்குழுவினர் தெரிவித்தனர்.
ட்ரெய்லர் ஆரம்பிக்கும்போதே, இப்படம் கலந்து கொண்ட திரைப்பட விழாக்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
உலகெங்கிலும் உள்ள பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று இறுதியாக மக்கள் பார்வைக்காக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது குதிரைவால்.

இப்போது புரியும், ‘குதிரைவால்’ திரைப்படத்தை திரையரங்கில் பார்க்கவேண்டியதின் அவசியத்தை!

Leave a Response