கூர்மன் – பிரயன் B ஜார்ஜ்
நடிகர்கள் – ராஜாஜி, ஜனனி ஐயர், பாலசரவணன்
மனதில் இருப்பதை அப்படியே கண்டுபிடிக்கும் ஒருவனின் கதை தான் இந்த “கூர்மன்”. கூர்மையான புத்தியுடையவன்
மனதிற்குள் நினைப்பதை அறியும், மைண்ட் ரீடர் ஒருவன் தன் காதலி இறந்ததால் போலீஸிலிருந்து விலகி தனியே வசிக்கிறான். அவனிடம் அவ்வப்போது சிக்கலான கேஸ்களில், குற்றவாளிகளை விசாரிக்க உதவி கேட்கிறார் உயரதிகாரி. அந்த மாதிரி ஒரு பெண்ணை கொலை செய்த வழக்கில் வரும் குற்றவாளி ஒருவன் திடீரென தப்பித்து விட அவனை நாயகன் பிடிக்கிறாரா அந்த கேஸ் என்ன ஆகிறது என்பதே படம்.
படம் ஆரம்பித்து கூர்மன் அறிமுகமாவதும் அவரிடம் வருபவர்களை விசாரிப்பதும், என ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து ஆச்சர்யப்படுத்துகிறார்கள்.
அடுத்து அடுத்து வரும் திருப்பங்களும் போரடிக்காத திரைக்கதையும் என முதல் பாதி முடிவதே தெரியவில்லை. இது எல்லாம் கொஞ்சம் ப்ளஸ் மட்டுமே. படத்தின் பின் பாதி முழுக்கவே கூர்மனுக்கு கொடுத்த பில்டப் உடைந்து சாதராண படமாக மாறிவிடுகிறது.
படத்தின் ஆரம்பத்தில் மனதில் நினைப்பதை கண்டுபிடிக்கும் ஒரு அதிகாரியை காட்டும்போதே அவரிடம் ஒரு சிக்கலான கேஸ் வந்தால் எப்படி இருக்கும் என ஆவலாக இருக்கிறோம் ஆனால் நம்மை மொத்தமாக ஏமாற்றுகிறார்கள்.
இரண்டாம் பாதி யானைப்பசிக்கு சோளப்பொறி என்பது போல் இருக்கிறது திரைக்கதை. ஒரு பெரிய கான்செப்டை வைத்துகொண்டு இன்னும் நிறைய மேஜிக் செய்திருக்கலாம்.
ராஜாஜி மிடுக்காக இருக்கிறார். ஆனால் படம் முழுக்க கத்திக்கொண்டே இருக்கிறார். பாலசரவணன் அடிக்கும் பஞ்ச்கள் படத்தை சில இடங்களில் காப்பாற்றியுள்ளது. ஜனனி ஐயர் பாவம் கெஸ்ட் ரோல் செய்திருக்கிறார்.
இசை பரவாயில்லை ரகம், ஒளிப்பதிவு தரம். ஒரு நல்ல முயற்சி இன்னும் கொஞ்சம் முயன்றிருந்தால் ஒரு ஆழமான திரில்லர் விசாரணையாக மாறியிருக்கும். “கூர்மன்” பட்டை தீட்டியிருந்தால் வைரம்.