பழங்குடி இன மக்களுக்காக போராடும் ஜெய் பீம்

‘2டி என்டர்டெய்ன்மெண்ட்’ என்ற நிறுவனம் சார்பில் சூர்யா மற்றும் ஜோதிகா தயாரித்திருக்கும் படம்
“ஜெய் பீம்”. இயக்குனர் த. செ. ஞானவேல் எழுதி இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இணை தயாரிப்பு கற்பூரசுந்தரபாண்டியன்.

சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘ஜெய் பீம்’ படம் நவம்பர் மாதம் 2ஆம் தேதியன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் உலகம் முழுவதும் பிரத்யேகமாக வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்தில் பழங்குடி சமூகங்களுக்கு இடையேயான முரண்பாடுகளை எதிர்த்துப் போராடும் வழக்கறிஞராக சூர்யா நடித்துள்ளார். இவருடன் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ், நடிகைகள் ரஜிஷா விஜயன், லிஜோமோள், ஜோஸ் உளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

மிஸ்டரி டிராமா ஜானரில் தயாராகியிருக்கும் ‘ஜெய் பீம்’ படத்தில் பழங்குடி இனத்தை சேர்ந்த தம்பதிகளான செங்கேணி மற்றும் ராஜ்கண்ணுவின் வாழ்வியலை நுட்பமாகவும், ஆழமாகவும் பேசுகிறது. ராஜ்கண்ணு கைதுசெய்யப்பட்டு காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கிருந்து அவர் காணாமல் போகிறார். விசாரணைக்காக சென்ற தன்னுடைய கணவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த ராஜ்கண்ணுவின் மனைவி செங்கேணி, வழக்கறிஞர் சந்துருவின் உதவியை நாடுகிறார். வழக்கறிஞர் சந்துரு உண்மையை வெளிக் கொணரவும், மாநிலத்தில் ஆதரவற்ற பழங்குடி இன பெண்களுக்கு நீதி கிடைக்கவும் பொறுப்பேற்கிறார்.

அதில் அவர் வெற்றி பெற்றாரா? நீதி கிடைத்ததா? என்பதை அறிய நவம்பர் இரண்டாம் தேதி வரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டும்.

‘ஜெய் பீம்’ திரைப்படம், அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் நவம்பர் 2ஆம் தேதி தீபாவளி விருந்தாக பிரத்யேகமாக வெளியாகிறது.

Leave a Response