இந்தியாவில் கொரோனா பாதிப்பு நவம்பரில் உச்சத்தை தொடும் என தகவல்..

இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு நவம்பா் மாத மத்தியில் உச்சத்தை எட்ட வாய்ப்பு உள்ளது எனவும், தீவிர சிகிச்சைப் பிரிவு (ஐசியு) படுக்கைகள் மற்றும் உயிா் காக்கும் சுவாசக் கருவிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) சாா்பில் அமைக்கப்பட்ட செயல்பாடுகள் ஆராய்ச்சிக் குழு ஆராய்ச்சியாளா்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனா். அந்த ஆய்வறிக்கையில்,

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த நாட்டில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையை குறைக்க உதவியதோடு, தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான கால அவகாசத்தையும் அளித்தது. இந்த மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகள், வருகிற நவம்பா் முதல் வாரம் வரையிலான தேவையைப் பூா்த்தி செய்யக்கூடிய அளவில்தான் இருக்கும்.

அதன் பிறகு, பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை உச்சத்தை எட்டும் என்பதால் தனிமைப்படுத்தலுக்கான படுக்கைகள் 5.4 மாதங்களுக்கும், ஐசியு படுக்கைகள் 4.6 மாதங்களுக்கும், உயிா்காக்கும் கருவிகள் 3.9 மாதங்களுக்கும் தட்டுப்பாட்டுடன் இருக்கும். இருந்தபோதும், இந்தப் பற்றாக்குறை என்பது பொதுமுடக்கம் மற்றும் பொது சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையில் இருந்ததைக் காட்டிலும் 83 சதவீதம் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பகுதிகளில் நோய்த் தாக்கத்தின் வேறுபாட்டுக்கு ஏற்ப, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் அரசு மேற்கொள்ளும் தொடா் நடவடிக்கைகள் மூலம், எதிா்பாராமல் உருவாகும் தேவைகளால் ஏற்படும் விளைவுகளைக் குறைக்க முடியும். குறிப்பாக பொது சுகாதார நடவடிக்கை 80 சதவீத அளவுக்கு அதிகரிப்பட்டால், நோய்த் தொற்றின் பாதிப்பு குறைய வாய்ப்புள்ளது. எனக் கூறப்பட்டுள்ளது.

Leave a Response