ஊரடங்கை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்..

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு கடந்த மார்ச் மாதம் முதல் அமலில் உள்ளது. தொடர்ந்து நான்கு கட்டங்களாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு மே மாத இறுதியில் முடிவடைகிறது.

இந்நிலையில் நாட்டின் பல பகுதிகளில் கொரோனா கட்டுக்குள் வந்திருந்தாலும் சில நகரங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்து வருகிறது. இதனால் ஐந்தாம் கட்ட ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

கடந்த முதல் இரண்டு கட்ட ஊரடங்கில் பொருளாதார ரீதியாக பல நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் மூன்றாம் கட்ட ஊரடங்கு முதல் பல தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு தொடங்கியது முதல் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது.

இந்நிலையில் ஐந்தாம் கட்ட ஊரடங்கை தேவையான மாநிலங்கள் மேற்கொள்ள வழிசெய்யும் வகையில் மத்திய அரசு அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாநில அரசுகளால் கொரோனா பாதிப்பு பகுதிகளை கவனமாக கையாளவும், மற்ற பகுதிகளுக்கு தேவையான தளர்வையும் அளிக்க இயலும் எனக் கூறப்படுகிறது.

Leave a Response