பஹீராவாக புதிய அவதாரத்தில் பிரபுதேவா

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் பிரபுதேவாவை நாயகனாக கொண்டு இயக்கியுள்ள படத்திற்கு “பஹிரா” என தலைப்பிடப்பட்டுள்ளது. தலைப்பே நம்மை உள்ளிழுக்கும் அம்சமாக இருக்கும் அதே நேரம், பல கேள்விகளையும் எழுப்புகிறது. படம் எதைப்பற்றியது என ஆவலைத் தூண்டும்படி தலைப்பு அமைந்துள்ளது.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தலைப்பு பற்றி கூறும்போது,

“இத்தலைப்பு பிரபல காமிக் கதையில் வரும் கதாப்பாத்திரத்தின் பெயர் ஆகும். “தி ஜங்கிள் புக்” காமிக் கதையில் வரும் ஒரு கருஞ்சிறுத்தையின் பெயர் தான் ‘பஹிரா’. அந்தக்கதையில் வரும் நாயகன் பாத்திரமான மோக்ளியை பாடுபட்டு காப்பாற்றும் கருஞ்சிறுத்தையின் பெயர் தான் பஹிரா. இப்படத்தில் பிரபுதேவா சாரின் கதாப்பாத்திரம் இந்த குணநலன்களை கொண்டதாக இருக்கும். பாதுகாப்பு அரணாக, காப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய கதாப்பாத்திரம் அவருடையது, அதனால் தான் இந்தப்பெயரை வைத்தோம். இத்தருணத்தில் நடிகர் தனுஷுற்கு எங்கள் படத்தின் தலைப்பை பெருமையுடன் வெளியிட்டதற்கு பெரும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன். “பஹிரா” படம் சைக்கோ திரில்லர் கலந்த மர்ம வகை படமாகும். அதனுள் பல ஆச்சர்யங்களும், பல திருப்பங்களும் கொண்டிருக்கும்.

இப்படம் சைக்கோ திரில்லர் வகை என்றால் தொடர் கொலைகள் படத்தின் கதையில் இடம்பெறுமா என வினவியபோது,

“இப்போதைக்கு எதைப்பற்றியுமே சொல்ல முடியாது. ஆனால் இந்த வகை படங்களிலிருந்து முழுக்க மாறுபட்ட ஒரு புதிய அனுபவத்தை இந்தப்படம் உங்களுக்கு தரும். படத்தை பற்றி சொல்லி அதன் சுவராஸ்யங்களை குறைக்க விரும்பவில்லை அதை நீங்களே படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ஒன்று மட்டும் உறுதி இப்படத்தில் பிரபுதேவா சாரை நீங்கள் இதுவரை பார்த்திராத புதிய அவதாரத்தில், புத்தம் புது கோணத்தில் காண்பீர்கள்” என்று தெரிவித்தார்.

R.V. பரதன் B.A,B.L, மற்றும் S.V.R.ரவி சங்கர் ஆகிய இருவரும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். “அனேகன்” படப்புகழ் அமீரா தஸ்தர் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. படத்தில் நடித்துள்ள மற்ற நடிகைகள் பற்றி மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவிக்கவுள்ளது.

இப்படத்திற்கு இசையமைத்திருப்பது கணேசன் சேகர். ரூபன் படத்தொகுப்பு செய்ய, அபிநந்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலைஇயக்குநராக ஷிவ் யாதவ் இருக்கிறார். சண்டைப்பயிற்சிக்கு ராஜசேகர் மற்றும் அன்பறிவு பொறுப்பேற்றுள்ளார். பா.விஜய் பாடல்கள் எழுதியுள்ளார்.

Leave a Response