சிவகார்த்திகேயனுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறேன்

சமீபத்தில் வெளியிடப்பட்ட “ஹீரோ” படத்தின் ட்ரைலருக்கு எல்லா தரப்பிலிருந்தும் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக படத்தொகுப்பாளர் ரூபன் தனது குழுவிற்கு கிடைத்து வரும் வரவேற்பால் பெரும் மகிழ்ச்சியில் திளைக்கிறார். இந்த பாராட்டுரைகள் அனைத்தும் இயக்குநர் பி.எஸ்.மித்திரனுக்குத்தான் செல்லவேண்டும். காரணம் அவரது தெளிவான பார்வையும் மற்றும் சரியான திட்டமிடலும்தான் என்கிறார்.
“ஹீரோ” படத்தின் முன்னோட்டம் முழுவதும் நாயகன் சிவகார்த்திகேயனுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்காமல், மற்ற பாத்திரங்களின் பங்களிப்புக்கும் வாய்ப்பு வழங்கியிருக்கிறது. இது குறித்தும் விவரித்த படத்தொகுப்பாளர் ரூபன் மேலும் தொடர்ந்து கூறியதாவது,
“இதற்காக நான் சிவகார்திகேயனுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறேன். மிகப் பெரிய நடிகராக இருந்தும் அவர் எங்கள் பணியில் எப்போதும் குறுக்கிடவில்லை. குறிப்பாக டிரைலர் கட் பண்ணும்போதும் எங்களுக்கு முழு சுதந்திரத்தைக் கொடுத்தார்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய ரூபன் “ஹீரோ” படம் குறித்து கூறியதாவது,
“ஒரு திரைப்படம் என்பதைத்தாண்டி, சமூகப்பொறுப்புடன் ஒரு காட்சியை கருத்தாக்கம் செய்யும் மித்ரன் வசீகரமான முறையில் அதை வழங்கியிருக்கிறார். “ஹீரோ” படம் பொழுதுபோக்கு அம்சங்கள் நிரம்பிய ஜனரஞ்சகப்படம் என்றாலும், இதிலுள்ள செய்தி, படம் பார்ப்பர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி, பாராட்டும் வரவேற்பும் பெறும் என நான் நம்புகிறேன். திரையில் தோன்றும் நடிகர்களின் சிறப்பான நடிப்பு, ஆதிக்கம் செலுத்தும் யுவன் சங்கர் ராஜா சாரின் இசை, ஜார்ஜ் சி.வில்லியம்ஸின் அருமையான ஒளிப்பதிவு என்று “ஹீரோ” படத்தின் ஒவ்வொரு அம்சமும் ரசிகர்களிடம் வெகுவான பாராட்டுதல்களைப் பெறும்” என்றார்.

படத்தொகுப்பாளர் ரூபன் படத்துக்கு இடையூறாக இருக்கும் பாடலையோ, காட்சியமைப்பயோ அனுமதிக்க மாட்டார் என்று படக்குழுவினரிடைய ஒரு பலமான கருத்து.உண்டு. இது குறி்த்து சிரித்துக் கொண்டே விவரித்த ரூபன், இயக்குநர்கள் என்மீது நம்பிக்கை வைத்து பொறுப்புகளை விடும்போது எனக்கு சற்று லேசான நடுக்கம் ஏற்படுவதுண்டு. “ஹீரோ” படத்தைப் பொறுத்தவரை இது சற்று கடினமான பணியாக இருந்தது. காரணம் இயக்குநர் மித்ரன் மற்றும் எழுத்துப் பணிகளைச் செய்யும் அவரது குழுவினர், ஒவ்வொரு காட்சியையும் ரசிக்கத் தக்கவகையி்ல் எடுத்திருந்தனர். படத்துக்கு தேவையில்லை என்று தோன்றும் காட்சிகளை நீங்கள் தாராளமாக வெட்டி எடுத்து விடலாம் என்று சவால் விடுவதுபோல் சுவையான காட்சிகளை கொண்டு வந்து என் எடிட்டிங் டேபிளை நிரப்பியிருந்தார்கள். செதுக்கி செதுக்கி ஹீரோ படத்தை நாங்கள் உருவாக்கிய விதம் எங்கள் எல்லோருக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும்,திருப்தியையும் கொடுத்திருக்கிறது. இப்போது ரசிகர்கள் எனும் நீதிபதிகள் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்” என்றார்.

உலகெங்கும் டிசம்பர் 20ஆம் தேதி திரைக்கு வரும் “ஹீரோ” திரைப்படத்தை கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸுக்காக கோட்டப்பாடி ஜே.ராஜேஷ் தயாரித்திருக்கிறார். ஆக்ஷன் கிங் அர்ஜுன், அபய் தியோல், கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் இவானா ஆகியோர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து முக்கிய வேடங்களில் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவையும், ரூபன் படத்தொகுப்பையும் செய்திருக்கின்றனர். கலை இயக்குநராக வி.செல்வகுமாரும், சண்டைப் பயிற்சியாளராக திலீப் சுப்பராயனும், பணியாற்றியிருக்கின்றனர். எழுத்துப் பணிகளை எம்.ஆர்.பொன் பார்தித்திபன், அண்டனி பாக்யராஜ், சவரிமுத்து ஆகியோர் செய்திருக்கின்றனர். பாடல்களை பா.விஜய் எழுத, ராஜு சுந்தரம் மற்றும் சதீஷ் நடனக்காட்சிகளை அமைத்திருக்கின்றனர்.
நிர்வாகத் தயாரிப்பாளர் பணிகளை டி.எழுமலையான் ஏற்றிருக்கிறார்.

Leave a Response