ஏழு கதாநாயகிகளுடன் இணையும் பிரபுதேவா

பரதன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள படம் “பகீரா”. இத்திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் மார்ச் 3, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும், இந்தப் படத்தில் பிரபுதேவாவுடன் நடித்தது பற்றியும் அதன் அனுபவத்தை பற்றியும் இதன் கதாநாயகிகள் பகிர்ந்து கொள்கிறார்கள்.

“பகீரா” திரைப்படத்தில் பிரபுதேவாவுடன் 7 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி, சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால், சாய்குமார், நாசர் மற்றும் பிரகதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நடிகை காயத்ரி பகிர்ந்து கொண்டதாவது,

“பிரபுதேவா சார் போன்ற பன்முகத்தன்மை கொண்ட ஒருவருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் என்னை மாஸ்டருடன் நடனமாட அனுமதிக்கவில்லை என்பது கொஞ்சம் ஏமாற்றம்தான். இந்த படத்தில் பணிபுரிந்திருப்பது என்னுடைய வழக்கமான பாணியில் இருந்து வெளியேறி இருக்கிறேன். ஆதிக் ஒரு வழக்கத்திற்கு மாறான இயக்குநராக இருக்கிறார். அதை நாங்கள் படப்பிடிப்பின் போது உணர்ந்தோம். அத்தகைய அற்புதமான குழுவில் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ‘பகீரா’ அனைவருக்கும் ஒரு முழுமையான பொழுதுபோக்காக இருக்கும்” என்றார்.

நடிகை ஜனனி கூறுகையில்,

“பொதுவாக பெரும்பாலான படங்கள் சிக்கலான மற்றும் தீவிரமான வகையைச் சேர்ந்தவையாக இருக்கும். ஆனால், இதற்கு முன்பு நான் நடித்தப் படங்களை விட இது வித்தியாசமானது. பிரபுதேவா சார் ஒரு ஜெம். அவருடன் பணிபுரிந்திருப்பதன் மூலம் எனது நீண்ட நாள் கனவு நனவாகி இருக்கிறது. அவர் இந்தியத் திரையுலகில் உள்ள அனைத்து பெரிய நட்சத்திரங்களுடனும் பணிபுரிந்திருந்தாலும், அவர் செட்டில் மிகவும் பணிவாகவும் எளிமையாகவும் இருந்தார். ஆதிக் என்னை இந்தப் படத்திற்காக என்னை அணுகியபோது, ​​எனது கதாபாத்திரம் திரையில் குறைந்த நேரமே வரும் எனவும், ஆனால் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் குறிப்பிட்டார். இந்த படத்தில் இத்தனை ஹீரோயின்கள் இருந்தாலும் கேட்ஃபைட் இல்லை. என்னை இந்தப் படத்தில் நடிக்க வைத்த தயாரிப்பு நிறுவனத்திற்கும், இயக்குநர் ஆதிக்கும் நன்றி” என்றார்.

நடிகை சஞ்சிதா ஷெட்டி கூறுகையில்

​​“பகீரா’ எனது கேரியரில் மிகவும் சிறப்பான படம். இந்த படத்தில் என்னையும் ஒரு பகுதியாக மாற்றிய பரதன் சார் மற்றும் ரவி சாருக்கு நன்றி. நேர்மறை எண்ணம் கொண்ட, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு உள்ளவர்களின் தயாரிப்பு இது. படத்தில் பல ஹீரோயின்கள் இருந்தாலும், படப்பிடிப்பில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒவ்வொரு நடிகருக்கும் முக்கியத்துவம் கொடுத்து கதையை மிக சிறப்பாக எழுதியிருக்கிறார் ஆதிக். பிரபுதேவா சார் இந்த படத்திற்காக வெவ்வேறு தோற்றங்களில் தோன்றுகிறார். மேலும், வெவ்வேறு எனர்ஜியையும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் கொடுத்துள்ளார். இது தியேட்டர்களிலும் பார்வையாளர்கள் மத்தியிலும் எதிரொலிக்கும். நீங்கள் திரையில் பார்க்கும் கதாபாத்திரத்தால் influence ஆக வேண்டாம். இந்தத் திரைப்படம் 100% பொழுதுபோக்கைக் கொண்டுள்ளது”.

நடிகை சாக்‌ஷி அகர்வால் கூறுகையில்,

“ஆதிக் கதை சொல்லும் போது, ​​7 ஹீரோயின்கள் கொண்ட ஸ்கிரிப்ட் எனும்போது அந்த எண்ணம் எனக்கு புதிதாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. ஆனால், அவர் எங்கள் அனைவருக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்து, முழு படத்தையும் சாமர்த்தியமாக கையாண்டார். ஒவ்வொரு ஷாட்டுக்கும் முன், அவர் என்னுடன் பழகுவார், ஆலோசனைகளைக் கேட்பார். இது என்னுடைய நடிப்பை மேலும் மேம்படுத்த உதவியது. இவ்வளவு பிரம்மாண்டமான நடிகருடன் இந்தப் படத்தில் திரையைப் பகிர்வது ஒரு அழகான அனுபவம்” என்றார்.

கணேசன் எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். செல்வகுமார் எஸ்கே & அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
பா. விஜய், ஆதிக் ரவிச்சந்திரன், ரோகேஷ் பாடல் வரிகளை எழுதியுள்ளனர்.

Leave a Response