உதவி செய்தவனை காதலன் என்று சந்தேகப்பட்ட ஊர் மக்கள்!

சினிமா பிளாட்பார்ம் என்ற பட நிறுவனம் சார்பாக V.T. ரித்திஷ்குமார் தயாரித்திருக்கும் படம் “நான் அவளை சந்தித்த போது”. இந்தப் படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் பார்த்திபன் இயக்கிய “கதை திரைக்கதை வசனம் இயக்கம்” படத்தில் நாயகனாக நடித்தவர். நாயகியாக சாந்தினி நடிக்கிறார். மலையாள முன்னணி நடிகர் இன்னசன்ட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் ஜி.எம்.குமார், பருத்திவீரன் சுஜாதா, கோவிந்த மூர்த்தி, சாம்ஸ், டி.பி.கஜேந்திரன், சாந்தி வில்லியம்ஸ், ராதா, சுப்புராஜ், காதல் சரவணன், நாடோடிகள் ரங்கா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தை இயக்கியவர் எல்.ஜி.ரவிச்சந்தர். இவர் “மாசாணி” மற்றும் பரத் நடித்த “ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி” போன்ற படங்களை இயக்கியவர். ஹித்தேஷ் முருகவேல் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். நா.முத்துக்குமார் மற்றும் அறிவுமதி பாடல்களை எழுதியுள்ளனர். ஆர்.எஸ்.செல்வா ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பினை ராஜா முகம்மது மேற்கொண்டுள்ளார்.
படம் பற்றி இயக்குனர் கூறும்போது,
“1996 ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி கதையை உருவாக்கி உள்ளோம். சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றும் ஹீரோ, வழக்கமாக வாய்ப்பு தேடி போகும் போது வழியில் இளம்பெண் (நாயகியை ) ஒருத்தியை சந்திக்கிறான். சென்னையில் தன் உறவினரின் வீட்டிற்கு வந்தவள் அட்ரஸை தொலைத்துவிட்டு வழி தெரியாமல் சுற்றிக்கொண்டிருக்கிறாள். ஹீரோ அவளை காப்பாற்றி ஊர்வரை கொண்டு போய் விடுகிறான். போன இடத்தில் ஊர்க்காரர்கள் ஒன்று கூடி இருவரையும் காதலர்கள் என தவறாக நினைக்கிறார்கள். பின்னர் என்ன நடக்கிறது. நாயகன், நாயகி என்ன ஆனார்கள் என்பதே இந்த படத்தின் கதை. படம் முடிந்து வெளியே வரும்போது எல்லோர் மனதில் ஒரு ஆழமான உணர்வு இருக்கும்.
படம் இம்மாதம் 27 ம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம், பாபநாசம், மாயவரம் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது” எனறு தெரிவித்தார் இயக்குனர் எல்.ஜி.ரவிசந்தர்.

Leave a Response