டிசம்பர் 13 அன்று வெளியே வருகிறார் காவல்துறை அதிகாரி காளிதாஸ்…

தற்போது பரத் நடித்து வெளிவரவிருக்கும் புதிய திரைப்படம் ‘காளிதாஸ்’. நாளைய இயக்குனர் சீசன் 3ல் 2வது இடத்தை வென்ற ஸ்ரீ செந்தில் இப்படத்தினை இயக்கியுள்ளார்.

சமீப காலமாக கைபேசி உபயோகத்தினால் பல பிரச்சனைகள் உருவெடுக்கிறது. உதாரணமாக சொன்னால், கைபேசியினால் குடும்பத்திற்குள் பிரச்சனை, பணியிடத்தில் பிரச்சனை என பல வகையான பிரச்சனைகள் தினம்தோறும் தொடர்கிறது. அப்படிப்பட்ட கைபேசி பிரச்சனைகளில் ஒன்றை தேர்வு செய்து அதன் மூலம் நடக்கக்கூடிய சைபர் க்ரைம், அதனை தொடர்ந்து நடக்கக்கூடிய தொடர் கொலைகளை கொண்டு ஒரு கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஸ்ரீ செந்தில்.

இப்படத்தின் சிறப்பு காட்சி சில தினங்களுக்கு முன்பு சினிமா பிரபலங்களுக்கு திரையிடப்பட்டது. அப்படத்தை பார்த்தவர்கள் ‘காளிதாஸ்’ திரைப்படம் ஒரு க்ரைம் திரில்லர் படம்மென்றும், இப்படம் தடம், ராட்சசன், ஜிவி போன்ற படங்களின் வரிசையில் இருக்கும் என தெரிவித்தனர். இன்று பலர் தங்களுடைய குடும்பங்களில் அவர்கள் தவறவிடும் பாசம், பந்தம், உறவு அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றி இப்படம் பேசும் எனவும் சொல்லப்படுகிறது. இப்படத்தில் நடிகர் பரத் காவல் துறை அதிகாரி கதாபாத்திரம் ஏற்று படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் மிக பெரிய ப்ளஸ், இப்படத்தின் க்ளைமாக்ஸை யூகிக்க முடியாது என்று படம் பார்த்தவர்கள் குறிப்பிடுகின்றனர். பரத்துக்கு இப்படம், தமிழ் சினிமாவில் ஒரு ரீ என்டிரியாக இருக்கும் என படம் பார்த்த பிரபலங்கள் சொல்கின்றனர்.

காளிதாஸ் படத்தில் பரத் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக மலையாள நடிகர் அன் ஷீடல் நடித்துள்ளார். இவர்களுடன் ஆதவ் கண்ணதாசன், சுரேஷ் மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்க, ஒளிப்பதிவாளர் வேல்ராஜிடம் உதவியாளராக பணியாற்றிய சுரேஷ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் இசையினை விஷால் சந்திரசேகர் அமைக்க பூவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பினை செய்திள்ளார்.

தினகரன் மற்றும் எம்.எஸ்.சிவநேசன் இணைந்து தயாரித்திருக்கும் இந்த ‘காளிதாஸ்’ திரைப்படம், வரும் 13ம் தேதி உலகெங்கும் 300க்கும் அதிகமான திரைகளில் வெளியாகிறது.


Leave a Response