எமோஷன், சஸ்பென்ஸ் மற்றும் ஆக்‌ஷன் நிறைந்தது “சுட்டுப்பிடிக்க உத்தரவு” – நடிகர் விக்ராந்த்..!

‘பாண்டிய நாடு’ படத்தில் தன்னுடைய மிகச்சிறந்த நடிப்பிற்காக அங்கீகாரத்தை பெற்ற நடிகர் விக்ராந்த் ஒவ்வொரு படத்திலும் அவரின் தரத்தை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தி வருகிறார். அவர் தேர்ந்தெடுக்கும் அழுத்தமான கதாபாத்திரங்களும், கதைகளும் சினிமாவில் அவரது இடத்தை உயர்த்தி வருகின்றன. ‘சுட்டு பிடிக்க உத்தரவு’ படமும் இதற்கு விதிவிலக்கல்ல. படத்தின் காட்சி விளம்பரங்களில் அவரது பகுதிகள் பார்வையாளர்களிடையே, இதில் அவருக்கு தனித்துவமான மற்றும் வித்தியாசமான பங்களிப்பை கொடுக்கும் வாய்ப்பு உள்ளது என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

இந்த படத்தில் நடிக்க எது தூண்டுதலாக இருந்தது என கேட்டபோது அவர் கூறியதாவது, “வெளிப்படையாக சொல்வதென்றால், நான் முதலில் இந்த படத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை. இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா என்னிடம் இது ஒரு மல்ட்டி ஸ்டாரர் படம் என தெரிவித்த போது, என் முந்தைய படங்களும் அதே வகையில் இருந்ததால் இதை தவிர்க்க விரும்பினேன்.

மேலும், ‘பக்ரீத்’ போன்ற திரைப்படங்கள் என்னை ஒரு சோலோ ஹீரோவாக நிறுவும் நேரத்தில், இந்த வாய்ப்பை ஏற்றுக் கொள்ள நான் தயங்கினேன். எனினும், ராம்பிரகாஷ் ராயப்பா குறைந்தது படத்தின் ஸ்கிரிப்ட்டையாவது கேளுங்கள் என கோரிக்கை வைத்தபோது, கதையை கேட்க முடிவு செய்தேன். கதை சொல்ல ஆரம்பித்த 10 நிமிடங்களில் கதை சொன்ன விதம் மற்றும் என் கதாபாத்திரத்தை அவர் வடிவமைத்திருந்த விதத்தை பார்த்து நான் வியப்படைந்தேன். கதையை கேட்ட பிறகு தவிர்க்கவே முடியாமல் ஒப்புக் கொண்டேன்” என்றார்.

டிரெய்லரை பார்த்தவுடன், விக்ராந்தின் கதாபாத்திரத்தில் உள்ள ஒரு மறைமுக தன்மை நம்முள் ஒரு ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. அவர் மேலும் கூறும்போது, “என் கதாபாத்திரம் எமோஷன், சஸ்பென்ஸ் மற்றும் ஆக்‌ஷன் என அனைத்தையும் கொண்டிருக்கும். வழக்கமாக, திரில்லர் திரைப்படங்கள் என்பது அனைவரையும் அடுத்து என்ன என யூகிக்க வைக்கும் ஒரு சூத்திரத்தையே கொண்டிருக்கும். அதற்கு மாறாக, சுட்டு பிடிக்க உத்தரவு நேரடியான கதை சொல்லலை கொண்டிருக்கும், ஆனாலும் கதை முழுவதுமே த்ரில்லர் கூறுகள் தக்க வைக்கப்படும்.

இதையெல்லாம் வைத்து பார்த்தால், விக்ராந்த் பல ஆக்‌ஷன் காட்சிகளில் நடிப்பதை பார்க்கும் உற்சாகம் தோன்றி இருக்கிறது. ஆனால் அவர் கூறும்போது, “உண்மையில் உயரத்தை பார்த்தால் மயக்கம் வரும் என்னை போன்ற ஒரு நடிகரை வைத்து இந்த காட்சிகளை படம் பிடித்தது சவாலான விஷயம். படத்தின் பெரும்பகுதி சண்டைக்காட்சிகள் மிக உயரமான கட்டிடங்களின் உச்சியில் படமாக்கப்பட்டவை, அதை செய்து முடிப்பது கடினமாக இருந்தது” என்றார்.

விக்ராந்த், அதுல்யா ரவி, மிஷ்கின் மற்றும் சுசீந்திரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள, இந்த படம் வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகிறது. கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் P.K.ராம் மோகன் தயாரிக்க, ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கியிருக்கிறார்.

Leave a Response