பெரும் சர்ச்சைகளுக்கு பின் மீண்டும் அரவக்குறிச்சியில் இன்று பிரச்சாரம் செய்கிறார் கமல்ஹாசன்..!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரச்சாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், இந்து மதத்தை பற்றி இழிவாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து அவர் மீது அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கமலின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். ஆங்காங்கே போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதனால் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த கமலின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று மீண்டும் பிரச்சாரத்தை தொடங்கினார் கமல். இந்நிலையில் கமலின் பிரச்சாரத்திற்கு விதிக்கப்பட்ட தடையை கரூர் மாவட்ட நிர்வாகம் நேற்று நீக்கியது. இதைத்தொடர்ந்து இன்று மாலை அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரம் செய்கிறார் கமல்.

இன்று மாலை 5 மணிக்கு தென்னிலையில் திறந்தவேன் மூலம் கமல்ஹாசன் பிரச்சாரத்தை தொடங்குகிறார். பின்னர் தொப்பம்பட்டி, நொய்யல், தளவாபாளையம் ஆகிய இடங்களில் வேட்பாளர் மோகன்ராஜிக்கு ஆதரவு கேட்டு தொடர்ந்து பேசுகிறார். வேலாயுதம் பாளையம் மலைவீதியில் இரவு 8.15 மணியளவில் நடக்கிற பொதுக்கூட்டத்திலும் அவர் பங்கேற்று பேசுகிறார் என மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response