எந்தச் சின்னம் ஒதுக்கினாலும், அது “அமமுக”வின் வெற்றி சின்னம் தான் – டிடிவி தினகரன்..!

டிடிவி தினகரன் தலைமையில் செயல்பட்டு வரும் அமமுகவிற்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கமுடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது. இருப்பினும், அந்தக் குழுவின் சார்பில் நிறுத்தப்படும் அனைத்து வேட்பாளர்களுக்கும் ஒரே சின்னத்தை ஒதுக்க பரிசீலிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சின்னம் ஒதுக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தங்களுக்கு உரிய நீதி வழங்கியிருப்பதாக அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

“பொதுச் சின்னம் ஒதுக்கும்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதால், தேர்தல் ஆணையம் தங்கள் கட்சிக்கு நிச்சயம் ஏதேனும் ஒரு சின்னத்தை ஒதுக்கும். குக்கர் சின்னம் கிடைக்காததால் தங்களுக்கு எந்தப் பின்னடைவும் ஏற்படப் போவதில்லை. தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தை தமிழக வாக்காளர்கள் வெற்றி சின்னமாக மாற்றுவார்கள். நாளை முதல் சென்னை ராயபுரத்தில் இருந்து தனது தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளேன்.

தேர்தல் ஆணையம் வழங்கும் சின்னத்தில் அமமுக போட்டியிட்டு மாபெரும் வெற்றிபெறுவோம். அமமுக வேட்பாளர்கள் 59 பேர்தான் தமிழ்நாட்டு மக்களின் ஆயுதம். தமிழகத்தில் ஜனநாயக விரோதிகளை 59 வேட்பாளர்களும் வீழ்த்துவர். 59 சின்னத்தில் அமமுக வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் வெற்றி பெறுவார்கள். தேர்தல் ஆணையம் எந்தச் சின்னம் ஒதுக்கினாலும், அது அமமுகவின் வெற்றி சின்னமாக இருக்கும்” என்று கூறினார்.

Leave a Response