“பேரன்பு” விமர்சனம் இதோ..!

ஒரு தந்தைக்கும், மாற்றுத்திறனாளி மகளுக்குமான பாசத்தின் மற்றொரு பரிமாணத்தை காட்டியுள்ள படம் தான் பேரன்பு.

தன்னை வெறுக்கும் மாற்றுத்திறனாளி பாதிக்கப்பட்டுள்ள தனது மகளின் அன்பை ஒரு தகப்பன் வென்றானா என்பதுதான் பேரன்பு படத்தின் ஒரு வரிக்கதை. கதையின் அடிநாதம் மட்டும் தான் இது என்றாலும், பேரன்பு படம் நமக்கு கற்றுத்தரும் பாடம் சொல்லில் அடங்காதது. நீங்கள் எவ்வளவு அதிஷ்டம் வாய்ந்தவர் தெரியுமா? என அமுதவன் (மம்முட்டி) நம்மை பார்த்து எழுப்பும் கேள்வியோடு படம் துவங்கிறது.

மாற்றுத்திறனாளி மகளை விட்டு விட்டு தான் விரும்பியவருடன் தாய் சென்றுவிட வெளிநாட்டில் கால் ஓட்டுனராக பணிபுரியும் அமுதவனுக்கு (மம்முட்டிக்கு) மகளை பார்த்துக்கொள்ளவேண்டிய கடமை வருகிறது. ஆனால் பாப்பாவுக்கோ, அமுதவனை பிடிக்காது. அதோடு, அக்கம்பக்கத்தினரின் புகார் காரணமாக, கொடைக்கானல் பகுதியில் அமைதியான சூழலில் வீடு வாடகைக்கு எடுத்து தங்குகிறார் அமுதவன். அங்கு மகளுக்கு இயற்கையின் அழகினை காட்டுகிறார். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக மகளின் அன்பை பெறுகிறார். ஒரு கட்டத்தில் அங்கிருந்து நகரத்துக்கு செல்ல நேரிடுகிறது. அங்கு என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக்கதை.

தந்தை – மகள் உறவை தங்க மீன்கள் படத்தில் ஏற்கனவே இயக்குனர் ராம் தொட்டிருந்தாலும், பேரன்பு படம் மூலம் உண்மையிலேயே பேரன்பை காட்டுகிறார். மாற்றுத்திறனாளி மகளுக்கும், தந்தைக்குமான உறவை இவ்வளவு நுட்பமாக இதுவரை எந்த தமிழ் சினிமாவும் பேசியதில்லை.

பேரன்பில் மம்முட்டியின் நடிப்பு அபாரம். மகளின் அன்பை பெற அவர் துடிப்பதும், பாப்பா பெரியவள் ஆகும்போது அதை எப்படி அணுகுவது என தெரியமல் தவிக்கும் போது பரிதாபத்தை சம்பாதிக்கிறார். நுட்பமான உணர்ச்சிகளை கூட இயல்பாய் வெளிப்படுத்துகிறார். மம்முட்டியும், சாதனாவும், மம்முட்டியும் தங்கள் நடிப்பால் படத்தை தூக்கி நிறுத்தியுள்ளனர். முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமியாக சாதனாவில் நடிப்பு அற்புதம்.

20 நிமிடமே வந்தாலும் அஞ்சலிக்கு இது முக்கியமான படம். நிறைவான நடிப்பை கொடுத்துள்ளார். மனதிற்குள் இருக்கும் வன்மம், குரோதம் ஆகியவற்றை பேரன்பு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. கதாபாத்திரங்களின் தன்மை, கொடைக்கானல் இயற்கை அழகு என அனைத்தையும் நமக்குள் கடத்துகிறது தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு. பின்னணி இசையில் நம்மை உறையவைக்கும் யுவன் சங்கர் ராஜா பாடல்களில் கோட்டை விட்டுள்ளார்.

பேரன்பு படத்தில் இடம் பெறும் அத்தனை கதாபாத்திரங்களும் நிஜவாழ்வில் நம் கண் முன்னே நடமாடும் மனிதர்களாக இருப்பதுதான் சிறப்பு. படத்தின் தொடக்கத்தில் மம்முட்டி கூறுவது போல நாம் எல்லாரும் எவ்வளவு ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறோம் என்கிற உணர்வை பேரன்பு படம் நமக்குள் ஏற்படுத்துகிறது.

தமிழில் வெளிவந்த சிறப்பான திரைப்படங்களின் வரிசையில் முக்கிய இடம் வகிக்கும் இந்த பேரன்பு.

Leave a Response