எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் : போலீசில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி..!

உயிருக்கு ஆபத்து எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என்று காதல் ஜோடி போலீசாரிடம் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் ஒக்கநாடு கீழையூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் அருண்குமார் (26). பி.பி.ஏ. முடித்துள்ள இவர் சிங்கப்பூரில் சில ஆண்டுகள் வேலை செய்துவிட்டு தற்போது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

காவாராப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஞானசேகரன் மகள் சிந்து (21). இவர் பி.டெக். படித்து முடித்துள்ளார். அருண்குமாரும், சிந்துவும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதுகுறித்து பெற்றோர்களுக்கு தெரிய வந்துள்ளது. இந்த காதலுக்கு சிந்து வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. அருண்குமாரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சிந்து பிடிவாதமாக இருந்துள்ளார். இருப்பினும் அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடைபெற்றது.

இதையடுத்து சிந்துவை அழைத்து கொண்டு கடலூருக்கு சென்ற அருண்குமார் அங்கு பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து தங்கள் உயிருக்கு பாதுகாப்பு வழங்க கோரி தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் தம்பதியினர் தஞ்சம் அடைந்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்று கொண்ட அவர், உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Leave a Response