18 எம்எல்ஏக்கள் தீர்ப்பால் தமிழகத்தில் சில மாற்றங்கள் வரும்: திருநாவுக்கரசர்..!

18 எம்எல்ஏக்கள் தொடர்பாக வர உள்ள தீர்ப்பால் தமிழகத்தில் சில மாற்றங்கள் வரலாம் என்று திருநாவுக்கரர் கருத்து தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-

18 சட்டமன்ற உறுப்பினர்களின் விசாரணை தொடங்குவது வரவேற்கத்தக்கது. 40 லட்சம் வாக்காளர்களுக்கு எம்எல்ஏக்கள் இல்லாமல் உள்ளனர். இது அந்த பகுதி மக்களின் வளர்ச்சியை பாதிக்கும். தீர்ப்பு விரைவில் வரும். அதற்கான முடிவுகளை நீதிமன்றம் எடுத்து உள்ளதை கருதுகிறேன். வர உள்ள தீர்ப்பால் தமிழகத்தில் சில மாற்றங்கள் வரலாம். சபாநாயகர் முடிவு ஏற்றுக்கொள்ளா விட்டால் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரலாம்.

ஓராண்டிற்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருக்க வாய்ப்பு உள்ளது. உள்ளாட்சித் துறையில் நேரடியாக நிதி ஒதுக்கி வருகிறார்கள். மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் நிதி ஒதுக்குவது நல்லதல்ல. சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் இணைந்து நடத்த மத்திய அரசு முடிவு செய்து வருவது சரி அல்ல. அவசரப்பட்டோ தனித்தோ முடிவு செய்யக்கூடாது. அனைத்து கட்சியிடமும் பேசி முடிவு செய்யவேண்டும்.

தூத்துக்குடியில் 13 பேரை சுட்டு கொன்று விட்டு ஆலையை மூடியதற்கு பதிலாக முன்பே மூடி இருக்கலாம். அதேபோலதான் 8 வழி சாலையும். எந்த திட்டமாக இருந்தாலும் தற்போது நடப்பது ஒரே வரி என்ற கொள்கையில் அல்ல. பல்வேறு நிலைகளில் வரி விதிக்கப்படுகிறது. உலகத்திலேயே இந்தியாவில் தான் 28 சதவீத வரி விதிக்கப்படுகிறது. வரி இல்லாமல் ஆட்சி நடத்தமுடியாது என்பது உண்மைதான். ஆனால் அது விதிக்கப்பட வேண்டிய முறை உள்ளது. நடுத்தர ஏழை மக்கள் உபயோகப்படுத்தும் பொருள்களுக்கு வரியை குறைக்க வேண்டும். வரி விதிப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும். மக்களும் வியாபாரிகளும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.

காவல்துறை என்கவுண்டர் செய்வது சரி அல்ல. குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். எந்த பின்னணியில் நடந்தது என்று தெரிந்த பின்னர்தான் முடிவு செய்ய வேண்டும். மத்திய அரசு வட மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கி கொண்ட தமிழர்களை பாதுகாப்பாக தமிழகம் அனுப்பி வைக்க வேண்டும். முதலில் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அமைத்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

Leave a Response