ஒருவர் மட்டுமே நடித்துள்ள வித்தியாசமான படம் : ஜூன்-22 வெளியாகிறது..!

தமிழ் சினிமாவில் அவ்வப்போது புது முயற்சிகளாக சில வித்தியாசமான படங்கள் வருவதுண்டு. அப்படி புதிய முயற்சிகளின் மூலம் தான், புதிய படைப்பாளிகள், ரசிகர்களை தியேட்டர்களுக்கு வரவழைக்க முடியும்.

அப்படிப்பட்ட ஒரு படம்தான், சிவானி செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கார்கில்’.

ஜிஷ்ணு என்பவர் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் என்ன புது முயற்சி என்றால், இந்தப் படத்தில் அவர் ஒரே ஒருவர் மட்டும்தான் நடித்துள்ளார். கார்கில் என்றதுமே இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்தான் மக்களுக்கு ஞாபகத்தில் வரும். ஆம்.. இதுவும் ஒரு போர்தான். சென்னையிலிருந்து காரில் பெங்களுர் செல்லும் நாயகனுக்கும் அவன் காதலிக்கும் ஏற்படும் மன போராட்டமே இந்தப் படம்.

ஒரே ஒருவர்தான் நடித்துள்ளதாகச் சொல்கிறீர்கள்.. அப்படியானால் காதலி யார் என கேட்கிறீகளா..? அதுதான் படத்தின் ட்விஸ்ட்டே. காதலில் நம்பிக்கை மிக அவசியம். அந்த நம்பிக்கை காதலை சேர்த்து வைக்கும் என்கின்ற நல்ல கருத்துடன், புது முயற்சி என்பதற்காக போராடிக்காமல், முழுக்க முழுக்க பொழுது போக்கு படமாக இது உருவாகியுள்ளது..

இளைஞர்கள், காதலர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து பார்க்கும் வகையில் சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ‘U’ சான்றிதழ் அளித்து பாரட்டியுள்ளனர். “வரும் ஜூன்-22-ல் திரைக்கு வர தயாராக இருக்கும் இந்த புதிய முயற்சி மக்களின் ஆதரவை நிச்சயம் பெறும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம்.” என்கிறார் படத்தின் இயக்குநரான சிவானி செந்தில்.

சுபா செந்தில் தயாரித்துள்ள இந்தப் படத்தின் பாடல்களை பாரி இளவழகன் மற்றும் தர்மா எழுத விக்னேஷ் பாய் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை கணேஷ் பரமஹம்ஸா, படத் தொகுப்பை அபிநாத் மேற்கொண்டுள்ளார்.

Leave a Response