அண்ணா அறிவாலயத்தில் “திமுக”வின் மாதிரி சட்டசபைக்கூட்டம் தொடங்கியது..!

திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் மாதிரி சட்டசபைக்கூட்டம் தொடங்கியது. இதில் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டம் முடிந்த நிலையில், மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்தி ஒவ்வொரு துறைகளுக்கும் தனித் தனியே நிதி ஒதுக்க வேண்டி சட்டசபை நேற்று மீண்டும் கூடியது.

இந்த கூட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானத்தை திமுக கட்சியினர் தாக்கல் செய்தனர். அதை சபாநாயகர் ஏற்க மறுத்ததால், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினின் உரை முடிந்ததும் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்பு செய்த எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசுகையில், தமிழக முதல்வர் பழனிசாமி பதவி விலகும் வரை சட்டசபையில் பங்கேற்க போவதில்லை என அறிவித்தார். இதனையடுத்து திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் மாதிரி சட்டசபை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இன்று காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் மாதிரி சட்டசபை கூடியது. இதில் திமுக, காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் எம் எல் ஏ.,க்கள் கலந்துகொண்டுள்ளனர்.

அதிமுக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற கருணாஸும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். திமுக சட்டசபைக் கொறடா சக்ராபாணி இந்த மாதிரி சட்டசபைக்கான சபாநாயகராக பொறுப்பேற்றிருக்கிறார்.

கூட்டம் தொடங்கியதும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும் என்றும், உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave a Response