மாணவர்கள் என்ன சுமை தூக்கிகளா..? இனிமேல் வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது..!

தனியார் சி.பி.எஸ்.இ பள்ளிகள் என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகங்களை மட்டுமே வழங்கவேண்டும் எனவும் 1 மற்றும் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக வழக்கறிஞர் புருஷோத்தமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், சி.பி.எஸ்.இ பள்ளிகள் என்.சி.இ.ஆர்.டி புத்தகங்களில் உள்ள பாடங்களைத்தான் நடத்த வேண்டும். ஆனால் சில தனியார் சி.பி.எஸ்.இ பள்ளிகள், தனியார் பதிப்பக புத்தகங்களையும் கொடுத்து, அந்த பாடங்களையும் கற்பிப்பதால் மாணவர்களுக்கு கூடுதல் மன அழுத்தமும் அதிக சுமையை தூக்கும் நிலையும் உருவாகிறது. அதேபோல் என்.சி.இ.ஆர்.டி விதிகளின்படி 1 மற்றும் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது. ஆனால் வீட்டுப்பாடங்களும் கொடுக்கப்படுகின்றன. இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி அந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் இன்று உத்தரவு பிறப்பித்தார். அதில், தனியார் சி.பி.எஸ்.இ பள்ளிகள் என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்தை மட்டுமே கற்பிக்க வேண்டும். தேவையற்ற பாடங்களை கற்பிக்கக்கூடாது. தனியார் பதிப்பக புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கக்கூடாது. பள்ளி செல்லும் மாணவர்கள் சுமை தூக்குபவர்கள் அல்ல. இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 1 மற்றும் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என அதிரடியாக உத்தரவிட்டார்.

Leave a Response