பலாத்கார சம்பவங்களை அரசியலாக்க வேண்டாம்-பிரதமர் மோடி

கதுவா விவகாரத்தில் மோடி மௌனமாக இருக்கிறார் என்ற குரல் லண்டன் வரை எதிரொலித்தது போலும், பலாத்கார சம்பவங்களை அரசியலாக்க வேண்டாம் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

லண்டனில், நேற்று ‘பாரதத்தின் குரல், எல்லோருடனும்’ என்னும் இந்திய வம்சாவளியினர் பங்கேற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய பிரதமர் மோடி இதனைக் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, பாலியல் பலாத்காரம் என்பது எப்போது நடந்தாலும் அது பலாத்காரம்தான். நம் மகள்களுக்கு எதிராக நடக்கும் இந்த கொடுமைகளை எப்படி சகித்துக் கொள்ள முடியும்? ஆனால், எந்த ஆட்சியில் அதிகமான பலாத்காரம் என்று ஒப்பிட்டுப் பார்க்கவா முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், நம் பெண் பிள்ளைகள் தாமதமாக வீட்டுக்கு வரும் போது என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லிக் கொடுக்கிறோம். ஆனால், மகன்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொடுக்கிறோமா? பெண்களை மதிக்க வேண்டும் என்று ஆண் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றார்.

பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட சர்ஜிகல் தாக்குதல் குறித்துப் பேசிய மோடி, எப்போதும் நாம் அமைதியையே விரும்புகிறோம். ஆனால், பயங்கரவாதிகளை உருவாக்கும் தொழிற்சாலையை நடத்தி, இந்தியர்களைக் கொல்வோரை ஒருகாலும் சகித்துக் கொள்ள மாட்டோம். அதனால்தான், அவர்களுக்கு புரியும் வகையில் பதிலடி கொடுத்தோம் என்று மோடி தெரிவித்தார்.

Leave a Response