பைக்கில் இருந்து விழுந்து உயிரிழந்த திருச்சி உஷாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ரூ.10 லட்சம் நிதி அளித்த கமல்ஹாசன்

திருச்சி: போலீஸ் எட்டி உதைத்ததில் பைக்கில் இருந்து விழுந்து உயிரிழந்த திருச்சி உஷாவின் குடும்பத்தினரை கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடும் அவர்களது குடும்பத்துக்கு ரூ.10 லட்சத்தை நிதியுதவியாக அளித்தார்.

திருச்சி திருவெறும்பூர் பெல் ரவுண்டானா அருகே ஹெல்மட் அணியாமல் சென்ற தம்பதியின் இருசக்கர வாகனத்தை கடந்த மார்ச் 7-ஆம் தேதி இரவு காவல் ஆய்வாளர் காமராஜ் நிறுத்தினார். ஆனால் ராஜா வண்டியை நிறுத்தாததால் மற்றொரு வண்டியில் சென்று ராஜாவின் வாகனத்தை எட்டி உதைத்தார்.

இதில்ராஜா – உஷா தம்பதி நிலைத்தடுமாறி கீழே விழுந்தனர். இந்த சம்பவத்தில் உஷா உயிரிழந்தார். அவர் 3 மாத கர்ப்பிணி என்று கூறப்பட்டதால் இந்த சம்பவம் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அவரது பிரேத பரிசோதனை முடிவுகளில் அவர் கர்ப்பிணி இல்லை என்று கூறப்பட்டுள்ளது. எனினும் ஹெல்மெட் போடாவிட்டால் வழக்கு போடாமல் எட்டி உதைத்து போலீஸார் அராஜகத்தில் ஈடுபடுவதா என்று மக்கள் கொந்தளித்தனர்.

இந்த சம்பவத்துக்கு ஆறுதல் தெரிவித்த கமல்ஹாசன் உஷாவின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் வழங்குவதாக அறிவித்திருந்தார். இன்று திருச்சியில் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த கமல்ஹாசன், உஷாவின் தாய் மற்றும் கணவர் ராஜாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் அவரது தாய் லூர்து மேரி மற்றும் சகோதரர் ராபர்ட்டுக்கு ரூ. 5 லட்சத்தை அளித்தார். இதையடுத்து மீதமுள்ள ரூ.5 லட்சத்தை உஷாவின் கணவர் ராஜாவிடம் வழங்கினார். அப்போது கதறி அழுத மூவரையும் ஆசுவாசப்படுத்தினார் கமல்.

முன்னதாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருச்சிக்கு ரயில் மூலம் கமல் பயணம் செய்தார். அவர் ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ படப்பிடிப்பின்போது ரயில் பெட்டியில் பயணம் செய்யும் படி சில காட்சிகள் வரும். அந்த சமயத்தில் ரயிலில் பயணம் செய்த கமல்ஹாசன், 13 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தான் மீண்டும் ரயிலில் பயணத்தை செய்துள்ளார். அப்போதே ஊடகங்களுக்கு பேட்டி அளித்தபடியே சென்றார்

Leave a Response