பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்பு கொடி காட்டுவோம்-ஸ்டாலின்..

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து வரும் 15-ஆம் தேதி தமிழகத்துக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்பு கொடி காட்டுவோம் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் கெடு விதித்தும் அதை மத்திய அரசு செயல்படுத்தவில்லை. இதனால் தமிழகம் கடும் கோபத்தில் உள்ளது.

இந்நிலையில் மத்திய அரசை கண்டித்து வரும் 2-ஆம் தேதி அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்துள்ளன.

இதனிடையே காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து திமுக சார்பில் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அந்த கூட்டம் முடிந்தவுடன் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம். காவிரிக்காக ராஜினாமா செய்ய அதிமுகவுக்கு துணிச்சல் இல்லை.

தமிழகத்துக்கு வரும் 15-ஆம் தேதி வருகை தரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம் என்றார் ஸ்டாலின்.

Leave a Response