கமலை வைத்து மெகா பட்ஜெட் படம் எடுப்பது பெருமையான விஷயம் – லிங்குசாமி!

29-kaml-ling-01

ஒவ்வொரு படத்திற்கும் இடையே குறிப்பிட்ட இடைவெளி விடும் கமல் விஸ்வரூபம் முடிந்ததும், விஸ்வருபம் 2 வேலைகளை துவங்கினார். விஸ்வருபம் 2 முடிவதற்குள் தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார் கமல். இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் மெகா பட்ஜெட் படம் ஒன்றை கமல்ஹாசன் இயக்கி நடிக்கவிருக்கிறார்.

இதுகுறித்து பேசிய லிங்குசாமி, “விஸ்வரூபம்-2 முடிந்ததும் கமல் இயக்கி நடிக்கும் திரைப்படம் ஒன்றை திருப்பதி பிரதர்ஸ் சார்பில் நாங்கள் தயாரிக்கிறோம். இந்த படம் அக்டோபரில் துவங்குகிறது. எங்கள் தயாரிப்பில் நீங்கள் ஒரு படம் இயக்கவேண்டும் என்று கேட்டதும், கமல் எங்களை அழைத்து மூன்று கதைகள் சொன்னார். அந்த மூன்று சிறந்த கதைகளில் ஒரு கதையை நாங்கள் தேர்ந்தெடுத்தோம்.

சினிமாவிற்காக கமல் தன்னை அற்பணித்துக்கொள்வதைப் பார்த்து நான் பூரித்துவிட்டேன். மேலும் கமலை வைத்து படமெடுப்பதில் பெருமையும் அடைகிறேன். தமிழ் சினிமாவின் மெகாபட்ஜெட் படங்களில் இந்த படமும் ஒன்றாக இருக்கும்” என்றார்.

மேலும் கமலை வைத்து படம் இயக்கும் உங்கள் ஆசை என்னவாயிற்று என்று கேட்டதற்கு, “எனக்கு அந்த ஆசை இன்னும் மனதிற்குள் இருக்கிறது , அந்த ஆசையையும் கமல் சாரிடம் தெரிவித்துள்ளேன். அது நடந்தால் மிகவும் சந்தோஷம்” என்றார்.