பத்திரிகையாளரும் எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான ஞானி சங்கரன் இன்று (ஜனவரி 15) அதிகாலை காலமானார். அவரது உடலுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், பார்த்திபன், நாசர் உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அதேபோல் அரசியல் தலைவர்கள் நல்லகண்ணு, முத்தரசன், திருமாவளவன், தமிழிசை சவுந்தரராஜன், வானதி ஸ்ரீநிவாசன் உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இலக்கியவாதிகளும், பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் இன்று மதியம் 3 மணியளவில் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் ட்வீட் ஒன்று பதிவு செய்தார். அதில், “திரு. ஞாநியின் மரணத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் செய்த உடல்தானம் போற்றுதலுக்குரியது. அவர் தானத்திற்கு சடங்குகள் தடையாகாமல் அனுமதித்த குடும்பத்தாரை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஞாநி அவரது உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்குமாறு முன்பே கூறியிருந்ததால் அவரது உடல் தானமாக வழங்கப்படுகிறது.