ஓகி புயல் பாதிப்பை பிரதமர் மோடி நேரில் பார்க்காததது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமர் மோடி போட்டோக்களில் மட்டுமே பார்த்தார்.
அண்மையில் வங்கக்கடலில் உருவான ஓகி புயல் கரையை கடக்காமலே கன்னியாகுமரி மாவட்டத்தை சூறையாடியது. இதில் ஆயிரக்கணக்கான ரப்பர் மரங்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் சேதமடைந்தன.
புயலுக்கு முன்பு கரைக்கு சென்ற 400க்கும் மேற்பட்ட மீனவர்கள் இதுவரை கரைதிரும்பவில்லை. இதனால் மீனவர்களின் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் புயல் பாதித்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிரதமர் மோடி 20 நாட்களுக்கு பிறகு இன்று வந்தார். கன்னியாகுமரியில் உள்ள விருந்தினர் மாளிகையில் பிரதமர் மோடி தலைமையில் ஓகி புயல் பாதிப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி போட்டோக்களை காண்பித்து பிரதமர் மோடியிடம் விளக்கினார். புயல் சேதம் குறித்த குறும்படமும் பிரதமர் மோடிக்கு போட்டு காண்பிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களையோ அல்லது பாதிக்கப்பட்ட பகுதிகளையோ பிரதமர் நேரில் சென்று பார்க்கவில்லை. புயல்பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய வந்த மோடி நேரில் சென்று பார்க்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரியில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு அழைத்து வரப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் விவசாயிகளை பிரதமர் மோடி சந்தித்தார். அவர்களிடம் புயல் பாதிப்பு குறித்து மோடி கேட்டறிந்தார்.
அப்போது ஓகி புயலால் மாயமான மீனவர்களை மீட்டு தர வேண்டும் நேரில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் புயலால் சேதமடைந்த விவசாய நிலங்கள் மற்றும் மீன்பிடி படகுகளுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.