குஜராத் மாநில சட்டசபைக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்ட வாக்குபதிவு வருகிற 9-ந்தேதி நடக்க உள்ளது.
இதையொட்டி அங்கு தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. ஆளும் கட்சியான பா.ஜ.க. மற்றும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளன.
அங்கு பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சியின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.
அதே போல், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி மாநிலத்தில் நிலவக்கூடிய பல்வேறு பிரச்சினைகளை முன்நிறுத்தி பிரதமர் மோடியை விமர்சித்து வருகிறார்.
மேலும் அவர் மாநில பிரச்சினைகள் தொடர்பாக ‘ஒரு நாள் ஒரு கேள்வி’ என்ற அடிப்படையில் தனது ‘டுவிட்டர்’ தளம் மூலம் பிரதமரிடம் கேள்வி எழுப்பி வருகிறார்.
அந்த வகையில், பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவர் ஏற்கனவே 4 கேள்விகளை எழுப்பி உள்ளார்.
இந்த நிலையில், பா.ஜனதா கட்சி குஜராத் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டதாக நேற்று அவர் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
குஜராத்தில் 22 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வரும் பா.ஜ.க. மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. குறிப்பாக பெண்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அக்கட்சி தவறிவிட்டது.
மாநிலத்தில் பெண்களுக்கு எந்த வித பாதுகாப்பும் இல்லை. கல்வியோ, ஊட்டச்சத்தோ எதுவும் கிடையாது. அதனால் அவர்கள் சுரண்டப்படுகிறார்கள்.
குறிப்பாக அங்கன்வாடிகளில் பணியாற்றும் பெண்கள் ஏமாற்றத்தை மட்டுமே பெறுகிறார்கள். குஜராத் மாநில சகோதரிகளுக்கு பா.ஜ.க. வெற்று வாக்குறுதிகளை மட்டும் அளித்து இருக்கிறது.
இவ்வாறு ராகுல்காந்தி கூறினார்.