உங்களுடைய பாவமான நடிப்பு எனக்கு தேவை!

நடிகர் RJ பாலாஜி நடித்துள்ள “வீட்ல விசேஷம்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீடு ஜூன் 10, 2022 அன்று சென்னையில் நடைபெற்றது. RJ.பாலாஜி-N J.சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை, Zee Studios & BayView Projects நிறுவனங்களுடன், Romeo Pictures இணைந்து தயாரித்துள்ளது. பிளாக்பஸ்டர் இந்தி திரைப்படமான ‘பதாய் ஹோ’வின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இந்தப் படத்தில் RJ.பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி, KPAC லலிதா, பவித்ரா லோகேஷ், விஸ்வேஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, ஆடியோ விஷேசம் என்ற பெயரில் ஜூன் 10, 2022) அன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் படக்குழுவை சார்ந்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் படக்குழுவினர் பேசிய சில துளிகள் கீழே:

இசையமைப்பாளர் கிரிஷ் கோபால கிருஷ்ணன் கூறியதாவது, “ஹாரர், திரில்லர் படங்களுக்கு இசையமைத்து கொண்டிருந்த என்னை கமர்சியல் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் படி மாற்றிய பாலாஜிக்கு நன்றி. எங்களுக்குள் சரியான கனெக்ட் இருந்தது. இந்த தலைமுறைக்கு ரசிக்கும்படியான குரல்களை கொண்ட பாடகர்களை இந்த படத்தில் பாட வைக்க முடிவுசெய்தோம். அதன்படியே உருவாக்கினோம். பாலாஜி இந்த படத்தில் பாடியுள்ள பாடல் சிறப்பாக வந்துள்ளது. விஸ்வாசம் படத்தில் வரும் கண்ணான கண்ணே பாடல் போன்ற ஒரு பாடலை சித் ஶ்ரீராம் பாடியுள்ளார். படம் சிறப்பாக வந்துள்ளது. அனைவரும் பார்த்து ரசிக்கும்படியான படமாக இது இருக்கும்.”

பாடலாசிரியர் பா விஜய் கூறியதாவது, “எனக்கு தமிழ் சினிமாவில் இரண்டாவது சுற்றை ஆரம்பித்தது பாலாஜி தான். பாலாஜி பல திறமைகள் கொண்டவர். அவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிகளை கொடுத்துவருகிறார். எனக்கு எல்லா படத்திலும் வாய்ப்பு கொடுக்கும் பாலாஜிக்கு நன்றி. இசையமைப்பாளர் கிரிஷ் உடைய பாடல்களை வித்யாசாகர் உடைய நவீன வடிவமாக நான் பார்க்கிறேன். இந்த ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன்.”

எடிட்டர் செல்வா கூறியதாவது, “பாலாஜி நேரத்தை எப்பொழுதும் வீணாக்க மாட்டார். அவர் எனக்கு நிறைய விசயங்களை கற்றுகொடுத்துள்ளார். இந்த படக்குழுவுடன் பயணித்தது மகிழ்ச்சி. இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் எனக்கு நிறைய ஒத்துழைப்பு கொடுத்தனர். இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும்.”

கலை இயக்குனர் செல்வா கூறியதாவது, “பதாய் ஹோ திரைப்படத்தை நம்மூர் ஸ்டைலில், பாலாஜி மற்றும் சரவணன் உருவாக்கியுள்ளனர். இந்த படம் எல்லோரும் பிடிக்கும்படியான படமாக உருவாகியுள்ளது.”

நடிகை அபர்ணா பாலமுரளி கூறியதாவது, “இது தான் எனது முதல் ஆடியோ லான்ச், நான் நடித்த முந்தைய படங்களின் வெற்றியை கொண்டாட எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த படத்தில் எனக்கு இப்படி ஒரு கதாபாத்திரத்தை கொடுத்ததற்கு பாலாஜிக்கு நன்றி. சத்யராஜ் மற்றும் ஊர்வசி போன்ற பெரிய நடிகர்களுக்கு மத்தியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. படத்தின் பெரிய பலமே ஆர் ஜே பாலாஜி, சரவணன் என இருவரும் தான். படத்தை தியேட்டரில் வந்து பாருங்கள். நன்றி”

நடிகை ஊர்வசி கூறியதாவது, “என்னுடைய மதிப்பை எனக்கு அதிகமாக ஞாபகப்படுத்தும் நபர் பாலாஜி. நான் பொதுவாக பல நிகழ்ச்சிகளுக்கு போவதில்லை. பாலாஜி இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்தே ஆக வேண்டும் என்று உறுதியாக இருந்தார். இந்த படம் பல நாட்களாக தமிழ் சினிமாவில் வராமல் இருந்த குடும்பங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு நடிகரை புரிந்துகொண்டு, அவர்கள் மேல் முழு நம்பிக்கையையும் வைப்பவர் ஆர் ஜே பாலாஜி. பழைய சத்யராஜ்யை ஆர் ஜே பாலாஜி இந்தப் படத்தில் கொண்டுவந்துள்ளார். இந்த படத்தில் பழைய நடிகர்கள் பலரை நடிக்கவைத்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு ரஜினி சாரை இயக்கும் அளவிற்கு திறமை உள்ளவர் ஆர் ஜே பாலாஜி. அபர்ணா பாலமுரளி சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தும் நடிகை நன்றாக நடித்துள்ளார். பட்ஜெட்டையும், வசூலையும் மனதில் வைத்து படத்தை இந்த இயக்குனர்கள் உருவாக்குகிறார்கள். படத்திற்கு என் வாழ்த்துகள்.”

தயாரிப்பாளர் போனி கபூர் கூறியதாவது, “நான் தயாரிப்பாளராக அறிமுகமான படம் ஒரு ரீமேக்காக உருவானது தான். நான் தமிழ் திரைப்பட கலைஞர்களுடன் படம் எடுக்க நினைத்தேன். தமிழ் கலைஞர்களுடைய ஒழுக்கங்களை நான் கேட்டு வியந்திருக்கிறேன். நான் தமிழில் வெற்றியடைந்த பல திரைப்படங்களை இந்தியில் ரீமேக் செய்துள்ளேன். என் குடும்ப வாழ்கையும், தொழிலும் எப்போதும் தென்னிந்தியாவுடன் தொடர்பில் இருக்கும். தென்னிந்தியா என் வாழ்வில் எப்போதும் தொடர்பில் இருக்கும். ஶ்ரீதேவி, ஊர்வசி பற்றி எப்போதும் கூறுவார். அவர் சிறந்த நடிகை என்று ஶ்ரீதேவி கூறுவார், நானும் அதை ஒத்துக்கொள்வேன். அவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தான் இந்த படத்தின் முதுகெலும்பு. நான் தமிழ்படங்களை தயாரிப்பதில் மகிழ்ச்சி. நான் நிறைய தமிழ்படங்களை தயாரிக்க ஆர்வமாய் உள்ளேன். பாலாஜி சிறந்த படமாக வீட்ல விஷேசம் படத்தை உருவாக்கியுள்ளார். அவர் சிறந்த நடிகர்களை தேர்ந்தெடுத்துள்ளார். இந்த படம் பெரிய பிளாக்பஸ்டராக மாறும்.”

இயக்குனர் NJ சரவணன் கூறியதாவது, “எங்களுக்கு இந்த படத்தை இயக்க வாய்ப்பளித்த போனிகபூர், ராகுலுக்கு நன்றி. இந்தி படத்தை பார்த்த பிறகு இதை தமிழில் எப்படி உருவாக்க போகிறோம் என்ற எண்ணத்தை போக்க எங்களுக்கு இருந்தவர் ஊர்வசி. நான் பார்த்து வியந்த சத்யராஜ் அவர்களை இயக்குவது எனக்கு மகிழ்ச்சி. எங்கள் படக்குழு எங்களுக்கு பெரிய ஒத்துழைப்பை கொடுத்துள்ளனர்.நாங்கள் பெருமைப்படும் ஒரு படத்தை உருவாக்கியுள்ளோம் என்ற மகிழ்ச்சியில் இருக்கிறோம்.”

நடிகர் சத்யராஜ் கூறியதாவது, “நான் கட்டப்பா போன்ற சீரியஸ் படங்களாக நடித்துகொண்டிருந்த போது, என்னுடைய பழைய கதாபாத்திரத்தை மீண்டும் கொண்டு வர வாய்ப்பில்லாமல் இருந்தது. அதை எனக்கு மீட்டு கொண்டுவர வந்தவர் பாலாஜி. இந்த படத்திற்கு என்னை தேர்ந்தெடுத்த காரணம் என்ன என நான் கேட்ட போது, உங்களுடைய பாவமான நடிப்பு எனக்கு தேவை என்று கூறினார். ஊர்வசி மேடம் இந்தியன் சினிமாவிற்கு கிடைத்த வரம். ஊர்வசியை தவிர இந்த கதாபாத்திரத்தை யாராலும் சிறப்பாக செய்துவிடமுடியாது. அவர்களுடைய நடிப்பு அபாரமானது. அபர்ணா பாலமுரளி உடைய நடிப்பு சூரரை போற்று படத்தில் போல் சிறப்பாக இருந்தது. லலிதா போன்ற திறமை மிகுந்த நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். அவர்களுடன் நடிப்பது எனக்கு சவாலாய் இருந்தது. ஆர் ஜே பாலாஜி, சரவணன் சிறந்த காம்போ, இருவருக்கும் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. இந்த படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் இளைஞர்கள். தயாரிப்பாளர் ராகுல், மேனேஜர் விக்கி இந்த படம் சிறப்பாக உருவாக காரணம். நான் இந்த படம் சூப்பர் ஹிட் ஆக வாழ்த்துகிறேன்.”

படம் குறித்து RJ.பாலாஜி கூறுகையில், “நான் இரண்டு, மூன்று வருடங்களாக காத்திருந்த மேடை இது. ஊர்வசி மேடம் இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர். அவர் தொழில்நுட்பம், எதிரில் நடிப்பவர்கள், கதை எல்லாவற்றையும் மனதில் வைத்து நடிப்பை வெளிப்படுத்துபவர். அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி
இந்த படத்தில் ஆடியோ வெளியீட்டுற்கு வந்த அனைவருக்கும் படக்குழு சார்பாக நன்றிகள். இந்தியில் பல வெற்றிகளை கொடுத்துவிட்டு, தமிழில் அஜித்குமார் போன்ற பெரிய நடிகர்களை வைத்து தயாரித்துவிட்டு, என்னை வைத்து படம் எடுப்பது மகிழ்ச்சி. அவருடன் தயாரிப்பாளர் ராகுல் உடைய உழைப்பு அளப்பறியது. இயக்குனர் சரவணன் தான் இந்த படத்தின் முதுகெலும்பு. எங்களுடைய புரிதல் தான் எங்களை இரண்டு படங்களை உருவாக்கவைத்தது. அவர் என்னை பல இடங்களில் தாங்கிபிடித்துள்ளார். நான் தூரத்தில் இருந்து பார்த்த இந்திய சினிமாவின் சிறந்த நடிகர் சத்யராஜ் சாரை இயக்கியது எனக்கு சந்தோசம். அவர் நாம் கேட்பதை அப்படியே கொடுப்பார். தயாரிப்பு நிறுவனத்தில் உள்ள அனைவரும் இந்த படத்தில் பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர். பா விஜய் சார் பாடலை ஒரே இரவில் எழுதி கொடுப்பவர். அவர் இப்போது வரை என் எல்லா படத்திலும் பாட்டு எழுதுகிறார். மக்கள் மனதில் அதிக நாள் நிற்க கூடிய பாடலை நாங்கள் உருவாக்க விரும்பினோம். கிரிஷ் அப்படிப்பட்ட பாடல்களை கொடுத்துள்ளார். சர்பட்டா, கர்ணன் போன்ற படங்களில் படதொகுப்பாளர் செல்வா, அவர் என் படத்தில் தொடர்ந்து பணியாற்றிவருகிறார். இந்த படம் பலரின் முயற்சியில் உருவாகியுள்ளது. வீட்ல விசேஷம், குடும்பத்தோடு தியேட்டரில் பார்க்கும் படமாக இருக்கும்.”

இப்படத்திற்கு கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்ய, விஜயகுமார் கலை பணியை கவனிக்க, அக்சத் கில்டியல்-சாந்தனு ஸ்ரீவஸ்தவ் ஆகியோரின் கதைக்கு RJ.பாலாஜி மற்றும் நந்தினி கார்க்கி வசனங்களை எழுத, பா.விஜய் பாடல் வரிகள் கொடுக்க, கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைக்க, செல்வா RK படத்தொகுப்பினை மேற்கொண்டுள்ளார். இப்படத்தை ஆர்.ஜி.பாலாஜி மற்றும் என்.ஜெ.,சரவணன் இணைந்து இயக்கியுள்ளனர்.

Leave a Response