கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்று கடலில் தத்தளித்து வரும் மீனவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் முதல்வர் பழனிசாமி தொலைபேசி மூலம் வலியுறுத்தியுள்ளார்.
ஓகி புயல் காரணமாக கடந்த 2 தினங்களுக்கு முன்னர் கன்னியாகுமரியில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் நிலை என்ன என்று தெரியாமல் அவர்களது உறவினர்கள் பதற்றமடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை முதல் நீரோடை வரையிலான மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நூற்றுக்கணக்கான மீனவர்களை காணவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இதே போன்று நாட்டுப்படகில் மீன் பிடிக்கச் சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களும் கடலில் தத்தளிப்பதாக தெரிகிறது. இதனால் மீனவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவ கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் மீனவர்களை மீட்க ஹெலிகாப்டர்களை அனுப்பி வைக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் முதல்வர் பழனிசாமி தொலைபேசி மூலம் வலியுறுத்தியுள்ளார். கடற்படை, கடலோர காவற்படையின் ஹெலிகாப்டர்களை மூலம் மீனவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி ஒகி புயல் பாதிப்பு தொடர்பான விவரங்களை உள்துறை அமைச்சர் விவரமாக கேட்டறிந்தார். கரை திரும்பாத மீனவர்களை விரைந்து மீட்க அரசு உதவ வேண்டும் என்று கேட்டுள்ளேன். மீனவர்களை மீட்க அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார் என்று தெரிவித்தார்.