ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி, அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ரயில்வேயின் கட்டுப்பாட்டில் இருந்த இரண்டு ஐஆர்சிடிசி ஓட்டல்களைப் பராமரிக்க தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தங்களை அளித்ததில் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதற்காக பாட்னாவில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை லாலு பிரசாத் யாதவ் பெற்றுக் கொண்டதாகவும் புகார் கூறப்பட்டது. இந்த ஊழல் புகார் தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவியும் ராப்ரி தேவி, அவரகளது மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இதில் சட்ட விரோத பணப் பரிமாற்ற புகார் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ராப்ரி தேவிக்கு அமலாக்கதுறை சம்மன் அனுப்பியது எனினும் அவர் ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்நிலையில் பாட்னாவில் உள்ள அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் ராப்ரி தேவி இன்று (சனிக்கிழமை) நேரில் ஆஜரானார்.
அப்போது, ஊழல் புகார் தொடர்பாகவும், சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் நடந்தது தொடர்பாகவும் டெல்லியில் இருந்து வந்த அதிகாரிகள் அவரிடம் கேள்விகள் கேட்டனர். இதுதொடர்பாக ராப்ரி தேவி அளித்த பதில்களை அவர்கள் பதிவு செய்து கொண்டனர்.