கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை சாந்தபிள்ளை கேட் மேம்பாலத்தை கட்டுவதற்காக 52 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், முதல்வர் திறப்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு அவசரம் அவசரமாக கட்டுமானப்பணிகளை மேற்கொண்டனர் ஒப்பந்தக்காரர்கள். அப்போது மேம்பாலத்தின் ஒருபகுதியில் விரிசல் ஏற்பட்டது. இதை எதிர்த்து அப்பகுதியினர் மற்றும் பொதுமக்கள் போராட்டம், உண்ணாவிரதம் இருந்துவந்தனர்.
இதையடுத்து, பொதுப்பணித்துறை பொறியாளர்கள் வந்து ஆய்வு மேற்கொண்டனர். இதற்கிடையே, மேம்பாலத்தை நாளை நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின்போது திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அ.தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் செய்துவந்தனர்.
இந்நிலையில், சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான அருண்பிரசாத் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், மேம்பாலத்தின் தரத்தை ஆய்வு செய்து மாற்றி அமைத்து தரமான முறையில் மேம்பாலத்தை சரிசெய்த பிறகுதான் திறக்க வேண்டுமென மனுத் தாக்கல் செய்தார். அதுவரை மேம்பாலத்தை திறப்பதற்கு தடைவிதிக்க வேண்டுமெனவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பாலத்தை திறப்பதற்கு இடைக்காலத் தடை விதித்தது.