கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதிமுகவின் இரு அணிகள் சார்பில் தினகரனும், மதுசூதனனும் போட்டியிட இருந்தனர். அந்த தொகுதியில் பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக அந்த தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துவிட்டது.
இதையடுத்து திமுக சார்பில் கடந்த முறை அறிவிக்கப்பட்ட வேட்பாளர் மருதுகணேஷே இந்த முறையும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தேமுதிக, பாமக ஆகியன கட்சிகள் போட்டியிடவில்லை என்று அறிவித்து விட்டன. காங்கிரஸ், இடதுசாரிகள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டன.
அதிமுகவின் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் ஆட்சி மன்றக் குழு கூடியது. இதில் சற்று சலசலப்பு ஏற்பட்டதால் வேட்பாளர் தேர்வு இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஓபிஎஸ் ஆதரவாளர் மதுசூதனன், ஈபிஎஸ் ஆதரவாளர் பாலகங்கா உள்பட 8 பேர் நேற்று விருப்ப மனுவை கட்சி அலுவலகத்தில் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று அதிமுக ஆட்சி மன்றக் குழு கூடுகிறது. இதில் வேட்பாளராக ஓபிஎஸ் ஆதரவு வேட்பாளரா அல்லது ஈபிஎஸ் ஆதரவு வேட்பாளரா என்பது இன்று தெரிந்து விடும்.