கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி, பழைய ரூ. 500, 1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
பழைய நோட்டுகளை மாற்ற கடந்த மார்ச் இறுதி வரை ரிசர்வ் வங்கி கெடு வழங்கியது. அதன்பின்னர் இந்த நோட்டுகள் செல்லாத காகிதங்களாகி விட்டன. ஆனால் சிலர் இந்த நோட்டுகளை கோயில் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.
கடந்த நவம்பர் 8 முதல், இந்த ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி வரையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மட்டும் ரூ. 8 கோடி மதிப்புள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளன.
இப்போது வரை இந்த நோட்டுகளை பக்தர்கள் உண்டியலில் செலுத்தி வருகின்றனர். மார்ச் மாதத்துக்குப் பிறகும் உண்டியலில் பக்தர்கள் பழைய நோட்டுகளை காணிக்கையாக செலுத்துவது தொடர்கிறது.
தற்போது ரூ. 15 கோடி வரை பழைய ரூபாய் நோட்டுகள் தேங்கியுள்ளன. இவற்றை மாற்ற அவகாசம் வழங்க கோரி, பல முறை தேவஸ்தான அதிகாரிகள் ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதினர்.
ஆனால் இதுவரை எந்தவித பதிலும் இல்லாததால் இந்த நோட்டுகளை மூட்டை, மூட்டையாக கட்டி பாதுகாப்பாக வைத்துள்ளனர்.