பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் நிதிஷ்குமாரும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் லாலுவும் இணைந்து, சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தனர்.
இதையடுத்து லாலு கட்சி மீதான குற்றச்சாட்டுக்களால் கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகினார். பின்னர் பாஜக ஆதரவுடன், ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடத்தி வருகிறது.
இதற்கு ஐக்கிய ஜனதா தள கட்சியின் சரத் யாதவ் அதிருப்தி தெரிவித்தார். புதிய கூட்டணிக்கு எதிராக பல்வேறு கருத்துக்கள் கூறி வந்த நிலையில், அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதற்கிடையில் அக்கட்சியின் அம்பு சின்னத்திற்கு உரிமை கேட்டு, தேர்தல் ஆணையத்தில் சரத் யாதவ் மனு அளித்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம், நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளமே உண்மையான கட்சி என்று அறிவித்தது. எனவே கட்சியின் சின்னத்தை பயன்படுத்தும் உரிமையை அவருக்கே வழங்கியது.