ரசகுல்லாவிற்கு ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்கள் சொந்தம் கொண்டாடி வந்த நிலையில், மேற்குவங்க மாநிலத்திற்கு ரசகுல்லாவிற்கான புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இனிப்பு பண்டமான ரசகுல்லா எந்த மாநிலத்திற்கு சொந்தம் என்று கடந்த 2 ஆண்டுகளாக ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்களுக்கு கடுமையான சண்டை நடந்து வந்தது. ஏனெனில் இது தாங்கள் கண்டுபிடித்த டெசர் வகை என்று இரு மாநிலங்களும் பஞ்சாயத்தை கூட்டி வந்தன.
கடந்த செப்டம்பர், 2015ல் ஒடிசா அரசு ரசகுல்லாவிற்கென ஒரு தினத்தை கொண்டாடியதால் இந்த சர்ச்சை வெடித்தது. ஒரு ரசகுல்லாவிற்கு இவ்வளவு அக்கப்போறா என்று நாம் நினைக்கலாம் ஆனால் இதை தங்களின் உணர்வு பிரச்னை போல இரு மாநிலங்களும் சண்டையிட்டுள்ளன.
ஒடிசாவின் பாரம்பரிய உணவா?
ரசகுல்லா 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இனிப்பு பண்டம் ஜகன்நாத கடவுள் லட்சுமி தாயாருக்கு இந்த இனிப்பு வகையை வழங்கியதாக ஐதீகம் இருப்பதாக ஒடிசா கூறியது. எனவே இது தங்களின் பாரம்பரிய உணவு என்று உரிமை கொண்டாடியது ஒடிசா. ஆனால் இது 150 வருட பழமை வாய்ந்த இனிப்பு வகை என்றும் ரசகுல்லாவை நபின் சந்திரதாஸ் அறிமுகம் செய்தார் என்றும் மேற்குவங்கம் பதில் வாதம் செய்தது. மேலும் திரிக்கப்பட்ட பாலில் இருந்து தயாரிக்கப்படும் ரசகுல்லா தூய்மை இல்லாததாக பார்க்கப்படும் என்பதால் இதனை ஜகன்நாதர் லட்சுமி தாயாருக்கு தந்திருக்க வாய்ப்பே இல்லை என்றும் மேற்குவங்கம் கூறியது.
மம்தா ஹேப்பி டுவீட்:
ரசகுல்லா எங்களது பண்டமே என்று ஒடிசாவும், மேற்குவங்கமும் போட்டி போட்டுக்கொண்ட நிலையில் இப்போது அதற்கான புவிசார் குறியீடு மேற்கு வங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை அந்த மாநில முதல்வர் மம்தா மகிழ்ச்சியோடு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரசகுல்லா நமக்கே சொந்தம் என்பது இனிப்பான செய்தி என்று மம்தா பதிவிட்டுள்ளார்.
எப்படி உருவாகிறது?
ரசகுல்லாவுல பாலை திரிய வைத்து பாலாடைக்கட்டி தயாரித்து அதில் இருந்து சிறு சிறு பஞ்சு போன்ற உருண்டைகளை உருட்ட வேண்டும். இதனை சர்க்கரைப் பாகில் மிதமான சூட்டில் வேகவைத்து எடுத்து அதனை ஆறவைத்து பாதாம் பிஸ்தா தூவினால் ருசியான ரசகுல்லா தயாராகிவிடும்.