முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்வதற்காக, ஒருநபர் ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இதற்கான உத்தரவு கடந்த செப். 25-இல் பிறப்பிக்கப்பட்டு விசாரணை ஆணையத்தின் வரம்புகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு செப். 22- ஆம் தேதிஅப்பல்லோ மருத்துவமனையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலைகள் மற்றும் நிலைமை குறித்தும் அவர் இறந்த நாளான டிச.5-ஆம் தேதி வரை அவருக்கு அளிக்கப்பட்ட அடுத்தடுத்த சிகிச்சைகள் குறித்தும் விசாரணை நடத்தப்படும்.
பிரமாணப் பத்திரங்கள்:
முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக தனிப்பட்டமுறையில் நேரடியாக அறிந்தவர்களும் நேரடித் தொடர்பு உடையவர்களும் அதுகுறித்து அவர்களுக்குத் தெரிந்த தகவல்களை சத்தியப் பிரமாண உறுதிமொழிப் பத்திர வடிவில், “”நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், முதல் தளம், கலாஸ் மகால் புராதனக் கட்டடம், எழிலகம் அருகில், சேப்பாக்கம், சென்னை-5” என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அடுத்த மாதம் 22- ஆம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ நேரடியாக தெரிவிக்கலாம் அல்லது தபால் மூலமாக அனுப்பிவைக்கலாம். வரும் திங்கள்கிழமை (அக். 30) முதல் விசாரணையைத் தொடங்குகிறேன். அன்றைய தினம் போயஸ் தோட்டம் சென்று வீட்டைப் பார்வையிட்டு விசாரிக்க உள்ளேன். விசாரணை வெளிப்படைத் தன்மையாகவே இருக்கும். குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரணையை முடித்து அரசிடம் அறிக்கை கொடுப்பேன் என்றார் நீதிபதி ஆறுமுகசாமி.
மூன்று மாதங்களில் அறிக்கை:
விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு அரசு உத்தரவு வெளியான நாளில் இருந்து மூன்று மாதங்களுக்குள் நீதிபதி ஆறுமுகசாமி தனது அறிக்கையை அளிப்பார் என்று தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. அதன்படி, டிச.22-ஆம் தேதிக்குள்ளாக அவர் தனது அறிக்கையை அரசுக்கு அளிக்க வேண்டும்.
சர்ச்சை தொடங்கியது எப்போது?
சென்னை மெரீனா கடற்கரைக்கு ஓ.பன்னீர்செல்வம் கடந்த பிப். 7-ஆம் தேதி சென்று முதல்வர் பதவியை திடீரென ராஜிநாமா செய்து தியானத்தில் ஈடுபட்டு, ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதிமுக அணிகள் இணைந்தாலும் ஜெயலலிதா மரணம் குறித்த நீதி விசாரணை கோரிக்கை தொடரும் என்று அறிவித்தார். இதையடுத்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் அறிவித்தார். அதைத் தொடர்ந்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அண்மையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்து அதற்கான உத்தரவைப் பிறப்பித்தது.
எய்ம்ஸ் அறிக்கையை வெளியிட்ட தமிழக அரசு
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது லண்டன் டாக்டர் ரிச்சர்ட், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவக் குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்தனர். ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக சர்ச்சை எழுந்தது. தொடர்ந்து அப்பல்லோ மருத்துவர்கள் ஏற்பாடு செய்த செய்தியாளர்கள் சந்திப்பில் லண்டன் டாக்டர் ரிச்சர்ட் உள்ளிட்ட சிறப்பு மருத்துவக் குழுவினர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்கினர். அப்போது தில்லி எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அறிக்கை வெளியிடாதது ஏன் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து தில்லி எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினர் அளித்த விரிவான அறிக்கை மற்றும் அப்பல்லோ மருத்துவமனை சமர்ப்பித்த அறிக்கை ஆகியவற்றை தமிழக அரசின் சார்பில் சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தில்லியில் கடந்த மார்ச் 5-ஆம் தேதி வெளியிட்டார்.