நில வேம்பு கசாயங்களை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இலவசமாக வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், நாளை காலை முதல் சென்னை மாநகராட்சி முழுமைக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கும் பணி தொடங்கப்பட உள்ளதாகவும், தொடர்ந்து டெங்குவை கட்டுப்படுத்துவதற்கான பணிகளை மக்கள் நல்வாழ்வுத் துறை விரைவுபடுத்தியுள்ளதாகவும் , சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னை அண்ணாநகரிலுள்ள சித்த மருத்துவமனையில் நிலவேம்புக் கசாயம் வழங்கும் விழாவை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்.
அப்போது பேசிய அவர், ‘நாள் ஒன்றுக்கு 2,000 கிலோ நிலவேம்புக் கசாயம் தயாரிக்கப்படுகிறது. கடந்த ஓராண்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 10.000 பேர் நோயிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மூன்று நாள்களில் 50,000 பேருக்கு நிலவேம்புக் கசாயம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 35 வாகனங்களில் வீடு, வீடாக சென்று நிலவேம்பு கசாயம் வழங்கப்படும். கொசுக்களைக் கட்டுப்படுத்த 16 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் பரவுவதற்கு தேங்கியிருக்கும் நல்ல நீரே காரணம். குப்பை மற்றும் சாக்கடைகளில் டெங்கு காய்ச்சல் உருவாக்கும் கொசு உருவாவதில்லை’ என்று தெரிவித்தார்.