முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து ஒரு வருடம் ஆகப்போகும் நிலையிலும் இன்னும் அவர் மரணம் குறித்த சர்ச்சைகள் ஓய்ந்த பாடில்லை. இந்நிலையில் ஜெயலலிதா மரண வழக்கில் விசாரணை கமிஷனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் விஜயன் முறையீடு செய்துள்ளார். ஜெயலலிதா கடந்த ஆண்டு செப் 22-ஆம் தேதி உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி காலமானார். இந்த மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக பொதுமக்கள் கருதினர். இதேபோல் அதிமுகவில் இருந்து தனி அணியாக செயல்பட்ட ஓ.பன்னீர் செல்வமும் தெரிவித்து வந்தார். இந்நிலையில் அதிமுக இணையவேண்டுமானால் ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
ஒருவழியாக ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணைக்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் ஏற்படுத்தப்பட்டது. அவர் எழிலகத்தில் கடந்த சனிக்கிழமை விசாரணை அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் ஜெயலலிதா மரண வழக்கு விசாரணை கமிஷனை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் விஜயன் முறையீடு செய்தார். மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரணை செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்