சசிகலா கணவர் நடராஜனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கல்லீரல், சிறுநீரகங்கள் செயலிழந்ததால் நடராஜன், சென்னையிலுள்ள கிளனேஜல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்பதால் அதற்கான தேடுதலில் ஈடுபட்டுள்ளதாக சசிகலாவின் சகோதரி மகனான டிடிவி தினகரன் கூறிவந்தார். இந்த நிலையில், நடராஜன் (74) உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை செப்டம்பர் 25ம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இன்று (அக்டோபர் 2), இரவு குளோபல் மருத்துவமனை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், நடராஜன் உடல்நிலை தொடர்ந்து மோசமாகவே உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அறிக்கையில் கூறியுள்ளதாவது:
74 வயதாகும் நடராஜன் மருதப்பா, கடந்த 9 மாதங்களாக கல்லீரல் மற்றும் கிட்னி பிரச்னைகளுக்காக சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் கல்லீரலில் ஏற்பட்டுள்ள மோசமான பிரச்சினையால், கல்லீரல் இன்டன்சிவ் கேர் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிட்னி பாதிப்பு, நுரையீரல் பாதிப்பும் அவருக்கு உள்ளதால், நடராஜன் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தற்போது அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்படவில்லை. நடராஜனின் கல்லீரல் செயல்பாடு முன்பைவிட இப்போது மோசமாகியுள்ளது. நடராஜன் இன்னும் கூட கல்லீரல் மற்றும் கிட்னி மாற்று சிகிச்சைக்காக காத்துள்ளார். நடராஜன் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களும் நடராஜனின் உடல்நிலை குறித்து அறிந்துள்ளனர். முகமது ரெலா தலைமையிலான மருத்துவர் குழு நடராஜனுக்கு சிகிச்சையளித்து வருகிறது. இவ்வாறு மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லீரல் பிரிவின் இயக்குநர் டாக்டர் இளங்குமரன் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
நடராஜனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து வருகிறது.
இதைத்தொடர்ந்து கணவர் நடராஜனை காண சசிகலா பரோல் கோரி விண்ணப்பித்துள்ளதாகவும், எப்படியும் பரோல் பெற்றுவிடுவோம் என்று டிடிவி தினகரன் நேற்று தெரிவித்தார். இந்நிலையில் தசரா விடுமுறை முடிந்துள்ளதால் சசிகலாவுக்கு இன்று பரோல் கிடைக்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.