மே 17 இயக்கத்தினர் தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரியும் பங்கேற்றிருக்கிறார்.
தி.நகர் பாஜக அலுவலகத்துக்கு கடந்த 2 நாட்களாக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த முற்றுகைப் போராட்டத்தின்போது, இனிமேலும் எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும், அனிதாவின் மரணம் ஒரு முற்றுப்புள்ளியாக இருக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
அதே போன்று மயிலாப்பூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு மத்திய, மாநில அரசை கண்டித்து இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நூங்கம்பாக்கம் லயோலா கல்லூரி அருகேயுள்ள சுரங்கப்பாதையில் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு 30க்கும் மேற்பட்ட லயோலா கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நேரிசல் ஏற்பட்டுள்ளது.