‘ஒரு கனவு போல’ திரைப்பட விமர்சனம்!

OKP-04-667x400
ராமகிருஷ்ணனும் – சவுந்தர ராஜாவும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். தாய், தந்தையை இழந்து படிப்பை முடித்துவிட்டு படிப்புக்கேற்ற வேலைக்காக காத்திருக்கிறார் சவுந்தரராஜா. லாரி டிரைவராக வரும் ராமகிருஷ்ணன் வீட்டில் தான் சவுந்தரராஜா வளர்ந்து வருகிறார். இருவரும் ஒருவருக்கொருவர் அன்போடு ஒருவரையொருவர் எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் திடீரென ராமகிருஷ்ணனுக்கு பெண் பார்க்கும் படலம் துவங்குகிறது. இதில் நாயகி அமலா ரோஸை பெண் பார்க்க செல்கின்றனர். பெண்ணை பார்த்து விட்டு நாயகனுக்கு பிடித்துபோக பெண்வீட்டார் மாப்பிள்ளை என்ன வேலை செய்கிறார் என்று கேட்டபோது மாப்பிள்ளை லாரி டிரைவர் என்று கூறினர்.

பின்னர் பெண் வீட்டார் லாரி டிரைவர்க்கெல்லாம் பெண் தரமுடியாது என தெரிவித்தனர். நாயகனின் நபனாக வரும் சவுந்தரராஜா ராமகிருஷ்ணனுக்கு பெண் பிடித்திருந்ததால், அமலா ரோஸை சந்தித்து பேசி இருவருக்கும் இடையேயான நட்பின் புனிதம் குறித்து கூற, அமலா திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார்.

ராமகிருஷ்ணனுக்கும், அமலாவுக்கும் திருமணம் நடந்த கையுடன் இருவரும் தனிக்குடுத்தனம் செல்கின்றனர். தனியாக குடியேறும் ராமகிருஷ்ணன் தனது நண்பனை தனது வீட்டிலேயே சாப்பிட வேண்டும் என்று வற்புறுத்துகிறார். ராமகிருஷ்ணனின் வற்புறுத்தலால் சவுந்தரராஜா பெரும்பாலும் அவர்கள் வீட்டிலேயே சாப்பிட்டு வருகிறார்.

இப்படி தினமும் நண்பன் வீட்டிற்கு வந்து சாப்பிடும் சவுந்தரராஜா திடீரென ஒருநாள் சாப்பிட வரும் வேளையில் மழை வந்து விடுகிறது அதனால் சிறிதுநேரம் நண்பன் வீட்டிலே தங்கவேண்டியதாயிற்று அப்போது மழையின் காரணமாக ஏற்பட்ட ஒருவித உணர்ச்சியால் அமலாவை தொடுகிறார் சவுந்தரராஜா. தொட்டவுடன் அமலா பதறிக் கொண்டு எழுகிறார். இதனால் அதிர்ச்சியடையும் சவுந்தரராஜா அங்கிருந்து சென்றுவிடுகிறார். மேலும் தனது நண்பனது மனைவியிடம் தவறாக நடக்க முயன்றதை நினைத்து வருத்தம் கொண்டு மனம் நொந்து போகிறார்.

இந்த சம்பவத்தை அடுத்து ராமகிருஷ்ணன் வீட்டிற்கு வராமல் தவிர்த்து வருகிறார் சவுந்தரராஜா. வீட்டிற்கு வராதது குறித்து ராமகிருஷ்ணன் சவுந்தரராஜாவிடம் கேட்க, அதன் பின்னணியில் என்ன நடந்தது? அவர்களது நட்பில் விரிசல் ஏற்பட்டதா? குற்ற உணர்ச்சியில் இருந்து சவுந்தரராஜா மீண்டு வந்தாரா? என்பதே படத்தின் மீதி கதை.

இந்த படத்தில் ராமகிருஷ்ணன் ஒரு படிக்காத லாரி டிரைவராகவும், நட்புக்கு மரியாதை தருபராகவும் சிறப்பாக தனது நடிப்பினை திறம்பட வெளிபடுத்தியிருக்கிறார். நண்பன் மற்றும் மனைவி, மீது சந்தேகப்படாத கதாப்பாத்திரத்தை ஏற்று, அதை திறம்பட செய்திருக்கிறார்.

சவுந்தரராஜா ஒரு படித்த இளைஞராகவும், தனக்கு வாழ்க்கை கொடுத்த ராமகிருஷ்ணன் மீது மரியாதையும், பாசமும் கொண்டவராகவும் நடித்திருக்கிறார். செய்த தவறை எண்ணி, வருத்தப்படும் காட்சிகளில் நடிப்பில் முதிர்ச்சி பெற்றிருக்கிறார். நாயகி அமலா, குடும்பப்பெண்ணாக பொறுப்பான கதாபாத்திரத்தை ஏற்று பொறுப்புடன் நடித்திருக்கிறார்.

ஒரு ஆண், பெண் மீது ஏற்படும் சபலத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், அதனால் ஏற்படும் பிரச்சனையும், நல்லவனாக இருந்தால் அந்த குற்ற உணர்ச்சியே அவனை கொன்று விடும் என்பதை மையக்கருவாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் விஜய் சங்கர். இதில் நண்பர்களுக்குள் இருக்கும் ஆழமான நட்பையும், கணவன், மனைவிக்குள் இருக்கும் பாசத்தையும் திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார்.

ராம் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் சிறப்பாகவே கொடுத்திருக்கிறார். அழகப்பனின் ஒளிப்பதிவும் படத்தின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

Leave a Response