கிரிமினல் குற்றம் நிரூபணமானால் தேர்தலில் போட்டியிட ஆயுட்கால தடை?

high court
‘கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டு, நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நபர்களுக்கு தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை விதிக்க வேண்டும்; அவர்கள் அரசியல் கட்சி நடத்தவோ, கட்சிப் பதவி வகிக்கவோ அனுமதிக்க கூடாது’ எனக் கோரி டில்லியை சேர்ந்த, பா.ஜ., செய்தித் தொடர்பாளர், அஸ்வினி குமார் உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். அவரை போலவே, மேலும் பலர் இதே கோரிக்கையை வலியுறுத்தி மனுத் தாக்கல் செய்து உள்ளனர்.

நேற்று நடந்த விசாரணையின் போது வழக்கறிஞர் தினேஷ் திவேதி கூறியதாவது:-

கிரிமினல் குற்றவாளிகள் தங்கள் தண்டனை காலத்திற்குப் பின் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பின் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும் தற்போதைய நடைமுறை தொடர்ந்தால் பாலியல் பலாத்கார வழக்கில், சிறை சென்றுள்ள குர்மீத் ராம் ரஹீம் போன்றோர் எதிர்காலத்தில் எம்.பி.,க்களாகவும், அமைச்சர்களாகவும் வலம் வருவர். அரசியல்வாதிகளுக்கு முரண் அரசு அதிகாரிகளோ, நீதித்துறையை சேர்ந்தவர்களோ குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் உடனடியாக, அவர்களின் பதவி பறிபோவதுடன், அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மீண்டும் பணி வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. அரசியல்வாதிகளுக்கு மட்டும் இதில் முரணான நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. எனவே, கிரிமினல் வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டோருக்கு தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை விதிப்பதோடு, அரசியல் கட்சியை நடத்தவும் கட்சிப் பதவி வகிக்கவும் தடை விதிக்க வேண்டும் என்று தினேஷ் திவேதி கூறியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு கூறியதாவது:-

கிரிமினல் வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டோருக்கு தேர்தலில் போட்டியிட ஆயுட்கால தடை விதித்தால் அது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானதா என்பது குறித்து ஆராய வேண்டும். இது குறித்து ஆய்வு செய்த பின்னரே முடிவுக்கு வர முடியும் என்று அந்த அமர்வு கூறியுள்ளது.

மீண்டும் இந்த வழக்கு விசாரணை வரும் 12ல் மீண்டும் நடக்கும்.

Leave a Response